கஞ்சா வழக்கில் ஜாமீன் கேட்ட சவுக்கு சங்கர்.. அதிரடியாக உத்தரவிட்ட மதுரை நீதிமன்றம்!
மதுரை: கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் ஜாமீன் கோரிய நிலையில், ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 27ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது மதுரை நீதிமன்றம்.
சவுக்கு சங்கர், யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், காவல்துறையில் பணியாற்றும் பெண் போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது கஞ்சா உள்ளிட்ட வழக்குகளும் பாய்ந்துள்ளன. குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கர் 2.5 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக அவர் உட்பட 4 பேர் மீது பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சவுக்கு சங்கரின் வீடு, கார் மற்றும் அலுவலங்களில் போலீசார் நடத்திய சோதனையில் சவுக்கு சங்கர் சட்டவிரோதமாக கஞ்சா பயன்படுத்தியதாக கூறி புதிய வழக்கு ஒன்றையும் காவல்துறையினர் பதிவு செய்தனர்.
தன் மீது பதியப்பட்டுள்ள கஞ்சா வழக்கில் ஜாமீன் கோரி மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மனு தாக்கல் செய்து உள்ளார். இந்த வழக்கு கடந்த 20ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்திருந்தது மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம்.
கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் 2 நாள் காவல் விசாரணை முடிவடைந்து சவுக்கு சங்கர் மதுரை நீதிமன்றத்தில் நீதிபதி செங்கமலச்செல்வன் முன்பாக நேற்று ஆஜர்படுத்தப்பட்டார் சவுக்கு சங்கர். சவுக்கு சங்கருக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவலை நீட்டித்து மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், ஜாமீன் வழக்கு விசாரணைக்காக இன்று பலத்த காவல்துறை பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு சவுக்கு சங்கர் அழைத்து வரப்பட்டார். வழக்கு விசாரணையின் போது, 2 நாள் போலீஸ் காவலில் காவல்துறையினர் தன்னை துன்புறுத்தவில்லை என சவுக்கு சங்கர் கூறியுள்ளார்.
மேலும், சவுக்கு சங்கர் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 27ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம். சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் அவகாசம் கோரியதை ஏற்று, விசாரணையை 27 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார் நீதிபதி.
முன்னதாக காவலில் இருக்கும் போது காவல்துறையினர் தனது கையை உடைத்ததாகவும் சரமாரியாக தாக்குதல் நடத்தியதாகவும் சவுக்கு சங்கர் பல குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications