'அதே வீரியத்துடன் நிச்சயம்' .. சவுக்கு சங்கர் சிறையில் இருந்து வந்த உடனே ஆக்ரோஷமாக சொன்ன விஷயம்
மதுரை: கோவை சிறையில் எனது கையை உடைத்து விட்டார்கள்.. அரசின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டியதற்காக, என் மீது பொய்யாக கஞ்சா வழக்கு போடப்பட்டது. அரசு பற்றி உண்மைகளை ஏறக்குறைய எட்டு மாதங்களாக எடுத்துக் கூறியதன் காரணமாகத்தான் சவுக்கு மீடியாவின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.. ஆனால் மீண்டும் அதே வீரியத்துடன் நிச்சயம் செயல்படுவேன் என சிறையில் இருந்து வெளியே வந்த சவுக்கு சங்கர் பேட்டி அளித்தார்.
மதுரை மத்திய சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையான பின் சவுக்கு சங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், நீதிமன்றங்களுக்கு நன்றி.. எனது வழக்கறிஞர்களுக்கு நன்றி, தமிழக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு இரண்டு முறை குண்டர் சட்டத்தில், பவள விழா கொண்டாடும் ஒரு கட்சி என்னை அடைத்திருக்கிறது என்பது உள்ளபடியே வெட்கக்கேடு..

நான் நடத்திய வந்த சவுக்கு மீடியா எட்டு மாத காலத்திற்குள், அரசின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டியதற்காக, என் மீது பொய்யாக கஞ்சா வழக்கு போடப்பட்டது. காவல்துறை குறித்து அவதூறாக பேசியதாக 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.. தமிழகம் முழுக்க நான் போலீஸ் வாகனத்தில் அலைகழிக்கப்பட்டேன்.. கோவை சிறையிலேயே எனது வலது கரம் உடைத்தார்கள்.. கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.. ஒவ்வொரு முறை காவல் துறை என்ன கஸ்டடி எடுக்கும் போதும், வெளியே வந்த பிறகு திராவிட மாடல் அரசு பற்றி எதுவும் பேசக்கூடாது,
திமுக அரசுக்கு ஆதரவாக பேச வேண்டும் என்பதை நிபந்தனையாக கூறினார்கள்.. இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால், நாங்கள் உடனேயே உங்களை விடுவிப்போம்.. அதை மீறினால் நாங்கள் உங்களை ஒரு வருடத்திற்கு சிறையில் இருந்து வெளியே வரவிட மாட்டோம் என்று நெருக்கடி கொடுத்தார்கள்.. நான் உண்மைகளை பேச அஞ்சப்போவது இல்லை என்று அத்தனை பேருக்கும் சொன்னதன் காரணமாகத்தான், என்னை விடியற்காலை 3 மணிக்கு அவசர அவசரமாக மதுரை சிறையில் அடைத்து , என்னை இரண்டாவது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்தார்கள்.. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனங்களை சந்தித்தவர் அல்ல..
விமர்சனங்களை பார்த்து பழகியவர்கள் அல்ல.. தந்தையின் நிழலில் வளர்ந்த போன்சாய் செடி தான் ஸ்டாலின் அவர்கள்.. பணியில் இருந்த அரசு ஊழியர் இறந்தால் கருணை அடிப்படையில் வேலை தருவது போலத்தான் திமுகவின் தலைவராகி இருக்கிறார்.. அதுபோலத்தான் தமிழகத்தின் முதல்வராகவும் ஆகியிருக்கிறார்..
அரசு பற்றி உண்மைகளை ஏறக்குறைய எட்டு மாதங்களாக எடுத்துக்கூறியதன் காரணமாகத்தான் சவுக்கு மீடியாவின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.. சவுக்கு மீடியா ஆபிஸ் சீல் வைக்கப்பட்டுள்ளது.. என் தாயாரின் பென்சன் கணக்கு உள்பட ஆறு ஏழு கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.. தவறுகள் பற்றி எந்த உண்மையும் வெளியே வந்துவிடக்கூடாது என்பதை முதல்வர் ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதியும் மிக கவனமாக இருக்கிறார்கள். கள்ளக்குறிச்சி விவகாரத்தை பொறுத்தவரை, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்திருந்தால் 66 உயிர்கள் பலியாகி இருக்காது. இதுபோன்ற பல்வேறு உண்மைகள் வெளியே வரக்கூடாது என்ற மறைப்பதற்காகவே சவுக்கு மீடியா முடக்கப்பட்டது. தற்போது வெளியே வந்துள்ள நான் மீண்டும் அதே வீரியத்துடன் நிச்சயம் செயல்படுவேன்" என்று சவுக்கு சங்கர் பேட்டியின் போது கூறினார்.












Click it and Unblock the Notifications