திமுகவில் இஸ்லாமியர்கள் யாராவது உயர் பதவியில் இருக்கிறார்களா? நெல்லை முபாரக் கேட்ட கேள்வி!
மதுரை: அதிமுகவின் உயர் பதவிகளில் இஸ்லாமியர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளதை போல் திமுகவில் உயர் பதவிகளில் இஸ்லாமியர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் விமர்சித்துள்ளார்.
மதுரையில் நேற்று நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்ட நிலையில், அவரை திறந்த ஜீப்பில் நிற்க வைத்து மேடைக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்ற நெல்லை முபாரக், எடப்பாடி பழனிசாமியை போல் இஸ்லாமிய மக்களுக்காக யாரும் குரல் கொடுக்கவில்லை என்றார்.

நெல்லை முபாரக் இப்படி பேசிக்கொண்டிருக்கும் போது எடப்பாடி பழனிசாமியின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பை போன்ற பூரிப்பை காண முடிந்தது. இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்பதை போல் முகமெல்லாம் சிரிப்பை பார்க்க முடிந்தது.
மேலும் பாஜகவுடனான கூட்டணியிலிருந்து விலகி தமிழ்நாட்டின் அரசியல் சூழலையே மாற்றிக் காட்டியவர் எடப்பாடி பழனிசாமி என நெல்லை முபாரக் புகழாரம் சூட்டினார். அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்து மதச்சார்பின்மையை நீக்க மத்திய அரசு முயற்சித்து வருவதாகவும் மதச்சார்பின்மையை நிலைநாட்ட அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
மக்களை ஏமாற்றி திமுக ஆட்சிக்கு வந்துள்ளதாகவும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக கட்சியின் பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்படும் எனவும் நெல்லை முபாரக் தெரிவித்தார். இதனிடையே இந்த மாநாட்டை நடத்தியதே எஸ்.டி.பி.ஐ.யின் பலத்தை எடப்பாடி பழனிசாமிக்கு நிரூபிக்க வேண்டும் என்பதற்காக தான் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்.டி.பி.ஐ. மாநாட்டிற்கு திரண்ட கூட்டத்தை பார்த்து எடப்பாடி பழனிசாமி, மாஜி அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் ஹேப்பி. இதனால் இனி வரும் நாட்களில் அதிமுக -எஸ்.டி.பி.ஐ. கூட்டணி பேச்சுவார்த்தை ஃபைனல் செய்யப்படும் எனத் தெரிகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது அமமுக, தேமுதிக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே எஸ்.டி.பி.ஐ. கட்சியை திமுக கூட்டணிக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை கடந்த கால தேர்தல்களில் முக்கிய அமைச்சர் ஒருவர் முன்னெடுத்தும் திமுக தலைமை ஆர்வம் காட்டாததால் அந்த முயற்சி பலிக்கவில்லை.












Click it and Unblock the Notifications