திமுக கூட்டணியில் எத்தனை சீட்? பிரஸ் மீட்டில் படபடவென கமல்ஹாசன் கொடுத்த ரிப்ளை!
மதுரை: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு எத்தனை சீட் ஒதுக்கப்படும் என்ற கேள்விக்கு, மநீம தலைவர் கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார். “ஒற்றுமையும், நோக்கமும்தான் கூட்டணியில் முக்கியமான விஷயம். அவை எங்களுக்குள் தெளிவாகவே உள்ளது. ” என கமல்ஹாசன் எம்.பி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரச்சாரம், பொதுக்கூட்டம், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என அரசியல் கட்சிகள் வெகு தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மய்யம், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த திமுக குழு அமைத்துள்ளது. தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான அந்த குழுவில் 7 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழுவினர் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிகளின் எண்ணிக்கையையும், எந்தெந்த தொகுதிகள் என்பதையும் முடிவு செய்ய உள்ளனர்.
இந்நிலையில், மதுரை காந்தி மியூசியத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், 'காந்தியை மறவோம்’ என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்க மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் எம்.பி மதுரை வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது கூட்டணியில் தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை நடக்கிறதா? எத்தனை தொகுதிகள் கேட்டுள்ளீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கமல்ஹாசன், “கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கவில்லை. அதில் கடமை தான் உள்ளது. இதை மனதில் வைத்து பேச்சுவார்த்தை நடைபெறும் என நம்பிக்கை உள்ளது.
எத்தனை தொகுதிகள் கேட்போம் என இப்போது சொல்ல முடியாது. எப்படியும் நாங்களே வெளியிடுவோம். ஒற்றுமையும், நோக்கமும்தான் தான் கூட்டணியில் முக்கியமான விஷயம். அவை எங்களுக்குள் தெளிவாகவே உள்ளது. இதை நோக்கியே நகர்கிறோம்” என்று தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து திமுக கூட்டணிக்கு ஓபிஎஸ் வருவதாக வெளியாகி வரும் தகவல் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “கூட்டணிக்கு அனைவரும் வருக... தமிழகம் வெல்க” எனத் தெரிவித்துவிட்டு உடனே அங்கிருந்து கிளம்பினார்.












Click it and Unblock the Notifications