இன்று காஷ்மீரைப் பிரித்தார்கள்.. அதேபோல நாளை தமிழகத்தையும் பிரிப்பார்கள்.. சீமான் பேச்சு
மதுரை: காஷ்மீரை போல் தமிழகத்தையும் இரண்டாக பிரிப்பார்கள் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370 சட்டப்பிரிவு கடந்த 5-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டன.
இதற்கு சிலர் ஆதரவும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அங்கு கடந்த 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்றப்பட்டது. இந்த மாநில பிரிவினைக்கு தமிழகத்திலுள்ள அரசியல்வாதிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

எதிர்ப்பும்
ரஜினிகாந்த் உள்ளிட்டோர் காஷ்மீர் விவகாரத்தை மத்திய அரசு கையாண்டது மிகவும் துணிச்சலானது என பாராட்டியிருந்தார். அது போல் கமல்ஹாசனோ காஷ்மீர் பிரச்சினையில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிமுக வேடிக்கை
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் கண்டன கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் கூறுகையில் தமிழகத்தை இந்த மோடி அரசு சேர, சோழ, பாண்டிய நாடு என 3-ஆக பிரித்தாலும் அதை அதிமுக வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கும் என்றார்.

பிரித்தாலும் பிரிப்பார்கள்
இந்த நிலையில் காஷ்மீர் விவகாரம் குறித்து மதுரையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் காஷ்மீரை போல் தமிழகத்தையும் மோடி அரசு இரண்டாக பிரித்தாலும் பிரிப்பார்கள்.

தென்தமிழகம்
வடதமிழகம் தென் தமிழகம் என இரண்டாக பிரித்துவிடுவார்கள். புதுவை போல் சென்னையை யூனியன் பிரதேசமாக மாற்றுவார்கள். நிர்வாக வசதிக்காக மாவட்டங்களை பிரிக்கலாம், ஆனால் மாநிலங்களை பிரிக்கக் கூடாது என்றார் சீமான்.












Click it and Unblock the Notifications