“அணில் ஏன் ‘Uncle Uncle’னு கத்துது? போன மாநாட்டில் சி.எம் சார்.. இப்போ அங்கிளா?” சீமான் அட்டாக்!
மதுரை: "அணில் ஏன் 'அங்கிள்.. அங்கிள்' எனக் கத்துகிறது? 'JUNGLE JUNGLE' என்று தானே கத்த வேண்டும்?" என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது பாணியில் பேசியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், மதுரையில் அண்மையில் நடைபெற்ற தனது கட்சியின் மாநாட்டில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை விமர்சித்துப் பேசியது, அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. முதல்வர் ஸ்டாலினை, ஸ்டாலின் அங்கிள் என பலமுறை குறிப்பிட்டுப் பேசினார் விஜய்.

மதுரை மாநாட்டில் விஜய்யின் இந்தப் பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்தனர். பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும் விஜய்யின் இந்தப் பேச்சை விமர்சித்திருந்தார். இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய் பேச்சு பற்றிய கேள்விக்கு தனது பாணியில் பதிலளித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய்யின் பேச்சு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சீமான், "அணில் ஏன் 'அங்கிள்.. அங்கிள்' எனக் கத்துகிறது? 'JUNGLE JUNGLE' என்று தானே கத்த வேண்டும்? போன மாநாட்டில் சி.எம் சாராக இருந்தவர் இந்த மாநாட்டில் எப்படி அங்கிள் ஆக மாறினார்?" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் பேசிய சீமான், "எடப்பாடி பழனிசாமி நான்கரை ஆண்டு காலம் முதலமைச்சராக இருந்தபோது அதிமுக யாரிடம் இருந்தது என விஜய் ஏன் கேட்கவில்லை?" என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
தவெக மாநாட்டில் பேசிய விஜய், "எம்.ஜி.ஆர் ஆரம்பித்த அந்த கட்சியை, கட்டிக்காக்கிறது யார்? அந்த கட்சி இப்போ எப்படி இருக்கிறது? நான் சொல்லிதான் உங்களுக்கு தெரியனுமா என்ன? அப்பாவி தொண்டர்கள் வேதனையை வெளியே சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள். பொருந்தாக் கூட்டணியாக அதிமுக - பாஜக கூட்டணி உள்ளது" எனப் பேசி இருந்தார்.
தவெக தலைவர் விஜய், விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த சீமான், "அடுத்த ஆண்டு தேர்தல் வருவதால் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூறுகிறார் விஜய்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications