“திருமாவளவனால் திமுகவிடம் பொது தொகுதியை கேட்க முடியுமா?” சீமான் கேள்வி
சென்னை: எம்ஜிஆர் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் பேசிய கருத்துக்கள் அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், இது குறித்து பேசிய சீமான், "திருமாவளவனால் திமுகவிடம் பொது தொகுதியை கேட்க முடியுமா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
எம்ஜிஆர் குறித்தும், ஜெயலலிதாவை அரசியல் களத்திற்கு அவர் அழைத்து வந்தது குறித்தும் திருமாவளவன் பேசியிருப்பதை ரத்தத்தின் ரத்தங்கள் அவ்வளவாக ரசிக்கவில்லை. நேரடியாகவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திருமாவளவன் கருத்துக்கு விமர்சனங்களை அடுக்கியுள்ளார். இந்நிலையில், சீமான் திருமாவளவன் குறித்து பேசியது கவனம் பெற்றிருக்கிறது.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் கூறியதாவது, "இது தமிழ்நாடு தானே! தமிழர்களால் வாக்கு செலுத்தி அமைக்கப்பட்ட அரசு தானே! இங்கே திராவிட மாடல் எங்கிருந்து வருகிறது? நாடு முழுவதும் மொழி வழி தேசிய இனங்கள் இருக்கும்போது, நாம் மட்டும் மரபு வழி இனம் என்று சொன்னால் எப்படி? தமிழர் ஆட்சி, தமிழர் அறம் சார்ந்த ஆட்சி, தமிழர்களின் ஆட்சி என்று சொல்ல முடியவில்லை உங்களால்.
இவர்கள் திராவிட ஆட்சி கூட என்று சொல்ல மாட்டேன் என்கிறார்கள். அதற்கு பதிலாக திராவிட மாடல் என்று சொல்கிறார்கள். திராவிடம் என்பது தமிழ் சொல் கிடையாது. அது சமஸ்கிருதத்திலிருந்து எடுக்கப்பட்டது. மாடல் என்பது ஆங்கிலம் திராவிட மாடல் ஆட்சி என்றால் எப்படி
தமிழ் தேசியம் என்று நாங்கள் பேசும்போது எதிர்ப்பவர்கள் யாரோ அவர்கள்தான் எங்கள் எதிரி. இப்போது நான் பேசியதை 2006க்கு முன்னர் பேசியது யார்? எங்கள் அண்ணன்தான் (திருமாவளவன்). பத்திரிகையாளர்கள் முன்பு கை கட்டி இப்போது பேட்டியளித்துக்கொண்டிருக்கிறேன். இதேபோல அண்ணன் பேசும்போது கை கட்டி பின்னால் நின்றிருந்தேன்" என்று கூறினார்.
இதனையடுத்து எம்ஜிஆர் பற்றி திருமாவளவன் கூறிய கருத்துக்களுக்கு விளக்கம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த சீமான், "பிராமண எதிர்ப்பு காட்டி திராவிட இருப்பை கட்டியவர்கள் இவர்கள். இதே வீரமணி, சமூக நீதி காத்த வீராங்கனை என்று சொல்லி ஜெயலலிதாவுக்கு செங்கோல் கொடுத்தாரே! பெரியார், அண்ணா வழியில் வந்ததாக சொல்லிக் கொள்ளும் நீங்கள் செய்யாததை அம்மையார் ஜெயலலிதா செய்தார்களே!
பொது தொகுதியில் ஒரு ஆதி தமிழ் மகனை நிறுத்த முடிகிறதா? அண்ணன் ஆ.ராசா பெரம்பலூர் தொகுதியில் நிற்கிறார். அது பொது தொகுதியாக மாறுகிறது. அப்படி மாறிய பிறகு ஆதி திராவிடர்கள் மட்டுமே வாக்களித்துதான் அண்ணன் வென்றாரா? எல்லா சாதியினரும் சேர்ந்துதானே வாக்களித்தார்கள்? ஆனால் ஏன் கருணாநிதி, நீலகிரியில் ஆ.ராசாவை நிற்க வைத்தார்?
பக்கத்தில் இருக்கும் திருச்சியில், தலித் எழில்மலை என்பவரை பொது தொகுதியில் நிறுத்தி ஜெயலலிதா வெற்றி பெற வைக்கவில்லையா? அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவரை சபாநாயகராக மாற்றவில்லையா? நான் உட்பட அனைவரும் எழுந்திருக்க வேண்டும் என்கிற உயரத்தில் அருந்திய சமூகத்தினரை அமர வைக்கவில்லையா?
தனபால் வீட்டில் சாப்பிட மாட்டேன் என்று சொன்னபோது, உன்னை உணவுத்துறை அமைச்சராக்குகிறேன் என்று ஆக்கவில்லையா? இதெல்லாம்தானே மாறுதல். அதைகூட நீங்கள் செய்யவில்லையே! இந்த தேர்தலிலாவது பொது தொகுதியில் நிறுத்துவார்களா! ஒரு பொது தொகுதியை திமுகவிடமிருந்து கேட்டுப்பெற அண்ணன் திருமாவளவன் என்ன பாடு படுகிறார்! ஆரியமும் திராவிடமும் வெவ்வேறு கிடையாது. இரண்டும் ஒன்றுதான். ஒரு நாள் இருவரும் கட்டிப்பிடித்து கைகுலுக்கி சங்கமிப்பார்கள், பார்த்துக் கொண்டே இருங்கள்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications