அண்ணாமலை என் ஸ்லீப்பர் செல்.. களத்தில் எனக்காக வேலை செய்கிறார்.. மோடிக்கு சீமான் சொன்ன மெசேஜ்
மதுரை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என்னுடைய ஸ்லீப்பர் செல்தான் என்றும் என் தம்பி அண்ணாமலை என் கட்சி வெற்றிக்காக வேலை செய்கிறார் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மதுரையில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்காக அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் மதுரை லோக்சபா தொகுதியின் நாம் தமிழர் வேட்பாளர் சத்யா தேவியை ஆதரித்து நேற்று கோ.புதூரில் சீமான் பரப்புரை பொதுக் கூட்டம் நடத்தினார்.

அப்போது அவர் கூறியதாவது: அண்ணாமலை என்னுடைய ஸ்லீப்பர் செல். நான்தான் அவரை பாஜகவிற்கு அனுப்பியுள்ளேன். என் மண் என் மக்கள், வேல் யாத்திரை எல்லாம் நான் எடுத்த முன்னெடுப்புகள்தான். அதனால் மோடி, என் தம்பி அண்ணாமலை, எனக்கு (சீமான்) வேலை செய்கிறார் என்பதை கவனத்தில் வைத்து வேலை செய்யுங்கள் என சீமான் பேசியுள்ளார்.
அவர் மேலும் பேசுகையில் தாய் மீதும் தமிழ் மீதும் உறுதியாக சொல்கிறேன். பதவிக்காகவோ பணத்திற்காகவே வந்தவர்கள் அல்ல நாங்கள். மக்களுக்கு உழைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே வந்துள்ளோம். ஒரே ஒரு முறை எங்களை நம்பி வாக்களித்து பாருங்கள்.
6 தேர்தல்களில் 7 சதவீத வாக்குகளை பெற்றுள்ளோம். நாங்கள் 10 சதவீதம் பெறுவதை திமுக தடுத்தது. இஸ்லாமியர், கிறிஸ்துவர்களிடம் நான் பாஜகவின் பி டீம் என பொய்யை பரப்பினார்கள். அதனை இந்த மக்கள் நம்பினார்கள். கமல்ஹாசன், டிடிவி தினகரன் வந்ததால் எங்களது வாக்கு சதவீதம் குறைந்துவிட்டது. என் கட்சி அங்கீகாரத்தை தடுத்தார்கள்.

ஊழல் லஞ்சத்தை துடைத்து குப்பைத் தொட்டியில் போடுவதுதான் எங்கள் கனவு. முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்றால் சைக்கிள் சின்னமும் குக்கர் சின்னமும் எப்படி கிடைத்தது. தேர்தல் ஆணையம் எவ்வளவு நேர்மையாக செயல்படுகிறது பாருங்கள். சீமானுக்கு சீமானின் எண்ணத்திற்கும்தான் மக்கள் வாக்களித்தார்கள் என்பதை பிற கட்சிகள் பார்க்கத்தான் போகிறார்கள்.
இந்திய மொழியின் தொன்மையான மொழி தமிழ் என நான் பேசியதை மோடி பேசி வருகிறார். உலகம் முழுக்க இதையேதான் பேசி வருகிறார். அப்படிப்பட்ட மொழிக்கு நீங்கள் கொடுத்த அங்கீகாரம் என்ன? சமஸ்கிருதம், இந்தி மொழி புதிய நாடாளுமன்றத்தில் உள்ளது. "தமிழ் தெரியவில்லை, நான் தமிழனாக பிறக்கவில்லையே என வருந்துகிறேன்" என மோடி பேசி வருகிறார்.
அப்படியென்றால் நானும் குஜராத்தி பேச இயலவில்லையே, குஜராத்தியாக பிறக்கவில்லையே என வருந்துகிறேன். சிவாஜியின் நடிப்பை பார்த்து வளர்ந்த எங்களுக்கு மோடியின் நடிப்பு எம்மாத்திரம்? கச்சத்தீவை தாரை வார்த்துவிட்டார்களா என மோடி பேசுவது காந்தி இறந்துவிட்டாரா என கேட்பது போல் உள்ளது.
அண்ணாமலை ஆர்டிஐ போட்டு கச்சத்தீவு குறித்து தெரியப்படுத்தினாராம். இத்தனை காலம் கழித்து இப்போது கச்சத்தீவை பற்றி பேசுகிறார்கள். 10 ஆண்டுகளாக மோடிக்கு கச்சத்தீவு மீதும் மீனவர்கள் மீதும் வராத அக்கறை திடீரென வர காரணம் என்ன? திராவிடம் நம் பங்காளி, எப்போது வேண்டுமானாலும் சண்டை போடலாம். ஆனால் பாஜக- காங்கிரஸ் பகையாளிகள், உள்ளே நுழைய விடக் கூடாது. பிறகு இந்தி, சமஸ்கிருதத்தை தூக்கிக் கொண்டு வருவார்கள் என சீமான் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications