"ஓபிஎஸ்" திரும்ப திரும்ப கேட்பீர்களா! தேவையில்லாம பேசுறீங்க.. பிரஸ் மீட்டில் செல்லூரார் திடீர் கோபம்
மதுரை: அட போங்கப்பா உங்களுக்கு இதே வேலையா போச்சு என அதிமுக குறித்த கேள்விக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கோபித்து கொண்டார்.
அதிமுக பிரச்சினை தொடர்பாக நாள்தோறும் ஒவ்வொரு நிர்வாகிகளும் மாறி மாறி வார்த்தை போரை தொடுக்கிறார்கள். இதில் பலரது விமர்சனங்கள் சுவாரஸ்யமாக உள்ளன.
பொதுவாக புகழேந்தி- ஜெயக்குமார், வைத்திலிங்கம்- ஆர் பி உதயகுமார், ஓபிஎஸ் - இபிஎஸ் உள்ளிட்டோரின் விமர்சனங்கள் நெற்றியடியாக இருக்கும். அந்த வகையில் அவ்வப்போது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவும் பேட்டி அளிக்கிறார்.
தர்மத்திற்கு கிடைத்த வெற்றி.. இனியும் இபிஎஸ் கனவுகள் பலிக்காது.. ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி அதிரடி!
மதுரை
இவர் மதுரையில் பைக்காரா பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் நடந்த இலவச மருத்துவ முகாம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார. அவர் கூறுகையில் எடப்பாடி பழனிசாமி பதவி தற்காலிக பதவி என்று முதல்வர் பேசியிருக்கிறார். எடப்பாடியார் நான்கரை ஆண்டுகாலம் ஆட்சி செய்தார்.
கருணாநிதியின் மகன்
தற்போதைய முதல்வரின் தந்தை கருணாநிதி முன்னாள் முதல்வராக இருந்தவர். கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். ஆனால் எடப்பாடி பழனிசாமி உழைப்பால் உயர்ந்தவர். அப்பாவுக்கு பின்னர் வாரிசு என்ற முறையில் எடப்பாடி உயர்ந்த நிலையை அடையவில்லை. தொண்டர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
பொதுச் செயலாளர்
விரைவில் அவர் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுவார். முதல்வர் எப்போது பார்த்தாலும் தான் உழைப்பதாக கூறி வருகிறார். அவர் ஜோக் அடிக்கிறார். அதற்கு நாம் சிரித்தாக வேண்டும். அவர் நிமிடத்திற்கு நிமிடம் போட்டோவுக்குத்தான் போஸ் கொடுக்கிறார். டிவியில் வருகிறார். வடிவேல் படம் வராத குறையை தமிழக அமைச்சர்களும் முதல்வரும் போக்குகிறார்கள் என்றார்.
அட போங்கப்பா
அப்போது ஓபிஎஸ் சுற்றுப்பயணம் குறித்து நிருபரகள் கேள்வி எழுப்பினர். அதற்கு செல்லூர் ராஜூ கோபமடைந்தார். அவர், "தேவையில்லாமல் கேட்கிறீர்கள். சும்மா திரும்பத் திரும்ப இதையே கேட்பீங்களா, அதிமுக பத்தி கேட்கிறது என்றால் நான் பேட்டியே கொடுக்கலை என சொல்லிவிட்டு சற்று நகர்ந்தார். உடனே நிருபர்கள், ராகுல் காந்தியின் நடைபயணம் குறித்து கேட்டனர்.
இப்படி கேளுங்க
அதற்கு இப்படி கேள்வி கேளுங்கப்பா. ராகுல் காந்தியின் நடைபயணம் காங்கிரஸ் கட்சிக்கு நல்லதாக அமையுமா என தெரியவில்லை. ஆனால் ராகுல் காந்திக்கு நல்ல பெயரை தரும் என செல்லூர் ராஜூ தெரிவித்தார். பொதுவாக செல்லூர் ராஜூ தனது பேட்டிகளில் ஜாலியாக இருப்பார், ஆனால் இந்த முறை ஓபிஎஸ் குறித்து கேட்டவுடன் கோபமடைந்தார்.