மு.க.அழகிரிக்கு பயந்து ஸ்டாலின் 5 வருஷமா மதுரை பக்கமே வரலை தெரியுமா?.. செல்லூர் ராஜு பகீர் தகவல்
மதுரை: மக்கள் பிரச்சினை குறித்து கேள்வி கேட்டால் தெர்மாக்கோலை வைத்து என்னை ஓட்டுகிறார்கள் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.
அதிமுக என்ற கட்சி தொடங்கி நேற்றுடன் 51 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இநத் நிலையில் 52 ஆவது ஆண்டு தொடக்க விழா நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்தில் நடந்த விழாவில் அங்கு அமைக்கப்பட்டுள்ள மணி மண்டபத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் முன்னாள் அமைச்சரும் கழக அமைப்புச் செயலாளருமான செல்லூர் ராஜு தலைமையில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில் வெடிகுண்டுக்கே டாட்டா காட்டியவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். சதுரங்க வேட்டை திரைப்படம் போல் முதல்வர் நம்மை ஏமாற்றுகிறார்.
வாரிசுக்கு கழகத்தில் இடமுண்டா என்ற கேள்விக்கு இந்த கழகம் சங்கர மடம் கிடையாது என்றார் முன்னாள் முதல்வர் கருணாநிதி. ஆனால் நாளொரு மேனியும் பொழுது ஒரு வண்ணமுமாக மகன், பேரன் என வந்து நம்மை ஏமாற்றுகிறார்கள். இதை அப்பவே தலைவர் எம்ஜிஆர் கூறியிருந்தார். கடந்த சட்டசபை தேர்தல் பிரச்சாரத்திற்கு ஸ்டாலின் மதுரை வந்த போது தெர்மாக்கோல் இங்கு நிற்கிறார்.
அவரை எதிர்த்து பெண்ணை நிறுத்தியுள்ளதாக சொன்னார். பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து 25 லட்சம் மக்களை தெருவில் விட்டுவிட்டார்கள். அப்போதும் எம்ஜிஆர் முதியோர் பென்ஷனாக ரூ 100 வழங்கினார். அவர் கொண்டு வந்த முதியோர் ஓய்வூதிய திட்டம் இன்றும் இருக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொட்டி குழந்தை திட்டத்தை கொண்டு வந்தார்.
கொள்கை என்பது வேஷ்டி, கூட்டணி என்பது தோளில் கிடக்கும் துண்டு. எப்போ வேணாலும் துண்டை தூக்கி போடலாம். ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் நிறுத்தினீர்களே முதல்வரே இது நியாயமா? அண்ணாதுரை வளர்த்த கட்சியை இன்று குடும்பக் கட்சியாக மாற்றிவிட்டனர். திமுக ஆட்சிக்கு வந்ததும் மின் கட்டணம் உயர்ந்துவிட்டது. வீட்டு வாடகையை உயர்த்திவிட்டார்கள்.
இந்த ஆட்சியில் கமிஷன், கரப்ஷன்தான் இருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் அவருடைய அண்ணன் மு.க.அழகிரிக்கு அஞ்சி 5 ஆண்டுகள் மதுரை பக்கமே வராமல் இருந்தார். பின்னர் ஜெயலலிதாவின் ஆட்சியில்தான் மதுரைக்கு வந்தார். பிடிஆர் பழனிவேல் உண்மையை சொன்னார். இன்று அவருடைய பல்லை பிடுங்கி இருக்கும இடம் தெரியாமல் இருக்கிறார்.
சட்டசபையில் ஏதாவது கேள்வி கேட்டா தெர்மகோல் பற்றி பேசி நம்மள ஓட்டுறாங்க. குடிநீர் பற்றி சட்டசபையில் பேசினால் பெத்தானியாபுரம் பகுதியில் 4 குடிநீர் தொட்டிகள் கட்டியிருக்கிறார்களாம். 4 வார்டுக்கு மட்டும் தொட்டி போதுமா, தூய குடிநீர் கிடைக்க வேண்டாமா, அதற்குதான் ரூ 1250 கோடியில் முல்லை பெரியாறு கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வந்தார் எடப்பாடியார். இவ்வாறு செல்லூர் ராஜு பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications