விஜய் எங்கள் கூட்டணியில் இணைந்தால் தூக்கி கொண்டாடுவோம்.. ஓப்பனாக இறங்கிய செல்லூர் ராஜூ
மதுரை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக -பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நீண்ட இழுபறிக்கு பிறகு திமுக -காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிட்டது. இந்நிலையில் தவெக விஜய்யை தங்கள் கூட்டணியில் இணைப்பதற்கு பாஜக தீவிர முயற்சி செய்து வருகிறது. தங்கள் கூட்டணியில் விஜய் இணைந்தால், அவரை தூக்கி கொண்டாடுவோம் என்று செல்லூர் ராஜூ அறிவித்துள்ளார்.
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில், "அதிமுக பாஜக கூட்டணியில் விஜய் இணைகிறார் என்று பத்திரிகைகளில் தான் செய்தி போடுகிறார்கள். எங்களை பொறுத்தவரை தோழமை என்பது தேர்தலின் கடைசி நிமிடத்தில் கூட மாறும். நாங்கள் தோழமையை மதிக்கக் கூடியவர்கள். தோளில் தூக்கிக் கொண்டாடுவோம். யாராக இருந்தாலும் தூக்கி கொண்டாடுவோம். இதுதான் அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகளின் குணம். [Sellur raju]

விஜய்யை கொண்டாடுவோம்
அவர்களை உச்சி முகர்ந்து பதவி கொடுப்போம். அண்ணன் வைகோ, பாமக போன்ற இயக்கங்கள் எல்லாம் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படுவதற்கு நாங்கள் முக்கிய காரணம். யார் எப்படி இருந்தாலும் சரி. திமுக கூட்டணியில் காங்கிரஸ் இத்தனை வருடங்களாக உள்ளனர். ஆனால் எங்களை பார்க்கும்போது மனமகிழ்ச்சியோடு பேசுவார்கள். என்ன இருந்தாலும் உங்களுடன் இருந்தது போல இணக்கமான கூட்டணி இல்லை. ஏதோ கடமைக்காக இருப்பதாக சொல்கிறார்கள்.
அன்பு சகோதரர் விஜய்
எங்களிடம் இருந்து பிரிந்தவர்கள் கூட தவறாக சொல்ல மாட்டார்கள். எங்கே சென்று விருந்து சாப்பிட்டாலும் உங்கள் விருந்தை போல மன மகிழ்ச்சி இல்லை என்று சொல்வார்கள். இது இன்றுள்ள எங்களுடன் தோழமையில் இருந்த அரசியல் கட்சிகள் அனைவருக்கும் தெரியும். புரட்சி தலைவர் காலத்திலும், அம்மா காலத்திலும், எடப்பாடியார் காலத்திலும் இது தொடர்கிறது. அன்பு சகோதரர் விஜய் உள்பட யார் வந்தாலும் நாங்கள் தூக்கி கொண்டாடுவோம். இது எங்கள் வழக்கம்.
திமுக தேர்தல் வாக்குறுதி
ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கும். தவெக கட்சியின் வாக்குறுதிகளை விஜய் அறிவித்துள்ளார். அதைப்பற்றி நீங்கள் அவர்களிடம் தான் கேட்க வேண்டும். திமுக நிறைவேற்றவே முடியாத நீட் தேர்வு விலக்கு, மது விலக்கு உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் கொடுத்தனர். எதையாவது நிறைவேற்றினார்களா. வகுப்பறையை மாணவர்கள் அடித்து நொறுக்குகிறார்கள். இளைய தலைமுறையை திமுக கெடுத்துள்ளது.
போதை மருந்துகள்
விதவிதமான வகையில் போதை வஸ்துகள் வருகின்றன. வாடையே அடிக்காத கஞ்சா வந்துள்ளதாம். எல்லா பிரச்சனைகளுக்கும் போதை மருந்துதான் காரணம். விடியல் கொடுக்கிறேன் என்று சொன்ன திமுக விடியலை தரவில்லை. மாறாக மக்களை பாழ்படுத்தியுள்ளது திமுக. அதற்கு மக்கள் இந்த தேர்தலில் தக்க பதிலடி கொடுப்பார்கள்" என்றனர்.












Click it and Unblock the Notifications