”காமம்" என்ற உணர்வு பகுத்தறிவையே குருடாக்கிடும்! இச்சைக்கு அடிமையானால்.. ஐகோர்ட் மதுரைகிளை கருத்து
மதுரை: பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதற்காக கீழ் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனைக்கு எதிராக இளைஞர் தொடர்ந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, பெண் மீதான காம உணர்வு ஆணுடைய பகுத்தறிவு சிந்தனையை குருடாக்கிவிடுகிறது என்று கருத்து தெரிவித்து உள்ளது.
கன்னியாகுமரியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். ஆற்றில் குளிக்க சென்ற பெண்ணை மணிகண்டன் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகாரளித்தார்.

இதனை தொடர்ந்து மணிகண்டனை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் மணிகண்டன் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதை உறுதி செய்து அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து இருந்தது.
இந்த நிலையில், கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மணிகண்டன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்து இருந்தார். இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், "பெண் மீது ஏற்படும் காம உணர்வு ஆண்களின் பகுத்தறிவு சிந்தனையையே குருடாக்கி விடுகிறது.
ஆண்கள் தங்களுடைய உடல் இச்சைக்கு அடிமையாகிவிடுவதால்தான் பாலியல் குற்றங்கள் நிகழ்கின்றன." என்று கருத்து தெரிவித்தனர். அத்துடன் ஆயுள் தண்டனை விதித்து கீழ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மணிகண்டன் தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உள்ளது.












Click it and Unblock the Notifications