வேங்கை வயல் போல மற்றொரு அதிர்ச்சி.. மதுரை அருகே குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு.. சிறுவனிடம் விசாரணை
மதுரை: மதுரை சோழவந்தான் அருகே குடிநீரில் தொட்டியில் மலம் கலந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடிநீரில் துர்நாற்றம் வீசுவதாகவும், நேற்று இந்த குடிநீரை குடித்தவர்கள் வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்கள் என்று கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். வேங்கைவயல் சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கிய நிலையில், அதே போன்ற குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது தொடர்பான இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை சோழவந்தான் அருகே கருப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அமைச்சியாபுரம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வரும் நிலையில், அங்குள்ள மக்களின் பயன்பாட்டுக்காக அண்மையில் குடிநீர் தொட்டி கட்டப்பட்டது.

குடிநீர் தொட்டியில் மனித கழிவு
புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியில் தண்ணீர் நிரப்பி மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. கடந்த 3 நாட்களாக குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில், குடிநீரில் துர்நாற்றம் வீசுவதாக மக்கள் புகார் அளித்தனர். மேலும், நேற்று இந்த குடிநீரை குடித்தவர்கள் வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்கள்.
இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்து இருப்பதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு
உடனடியாக தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். குடிநீர் தொட்டியின் ஆபரேட்டர் மற்றும் ஊழியர்களிடம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து குடிநீர் தொட்டி கிருமிநாசினி வீசி சுத்தம் செய்யப்பட்டது.
இருந்தாலும் கிராம மக்கள் துர்நாற்றம் வருகிறது, எனவே அந்த தொட்டியில் இருந்து வரும் குடிநீரை நாங்கள் பயன்படுத்த முடியாது என்று தெரிவித்தனர். இதையடுத்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் மேல்நிலை தொட்டியை ஆய்வு செய்தனர். உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க இன்று மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
இது தொடர்பாக கிராம மக்கள் கூறுகையில், குடிநீரில் மனித கழிவுகள் கலந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. இது சம்பந்தமாக போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையே, இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் விளக்கம் அளித்துள்ளார். குடிநீர் தொட்டியில் மலம் கழிக்கப்பட்டது 14 வயது சிறுவனின் தவறான செயல். சிறுவன் தவறுதலாக, விளையாட்டாக தொட்டியில் மலத்தை கலந்துள்ளதாகவும், சிறுவனிடம் காவல்துறை விசாரணை நடத்தப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.
வேங்கைவயல் சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கிய நிலையில், மீண்டும் அதே போன்ற குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது தொடர்பான இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வேங்கை வயல் சம்பவம்
கடந்த 2022ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில், ஆதிதிராவிட சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில், மனித கழிவு கலக்கப்பட்ட கொடூர சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
இந்த சம்பவம் தொடர்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் ஐ.பி.சி. சட்டப் பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை சி.பி.சி.ஐ.டிக்கும் மாற்றப்பட்டது. இதையடுத்து, சென்னை ஹைகோர்ட், வேங்கைவயல் சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணனை நியமித்து உத்தரவிட்டது.
பழிவாங்கும் நோக்கத்தோடு 3 பேர்
இந்த விசாரணை முடிந்த நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த முரளிராஜா சுதர்சன், மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஊராட்சி தலைவரின் கணவரை பழிவாங்கும் நோக்கத்துடன் மூன்று பேரும் இந்த செயலில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கு நீதி துறை நடுவர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications