எதிரும் புதிரும்; முகத்தை திருப்பிக் கொண்ட காங்கிரஸ் முக்கிய புள்ளிகள்; ரயில்வே மீட்டிங் ருசிகரம்!
மதுரை: மதுரையில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூரும், கார்த்தி சிதம்பரமும் ஒருவருக்கொருவர் முகத்தை திருப்பிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழக காங்கிரஸ் கமிட்டியில் ஏற்கனவே இவர்கள் இருவரும் எதிரும் புதிருமாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
திமுகவுக்கு தாவிய 3 அதிமுக ஒன்றியச் சேர்மன்கள்; கோட்டைவிட்ட தங்கமணி; பின்னணி என்ன?
இந்நிலையில் ரயில்வே ஆலோசனைக் கூட்டத்தில் இவர்கள் இருவருக்கும் மத்தியில் அமர்ந்த கனிமொழியிடம் மட்டும், அவ்வப்போது தனித்தனியாக பேசிக்கொண்டார்களாம்.
ரயில்வே திட்டம்
ரயில்வே பட்ஜெட்டில், தமிழகத்திற்குத் தேவையான திட்டங்கள் மற்றும் ரயில் சேவைகள், குறித்து தெற்கு ரயில்வே சார்பில், கோட்ட வாரியாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அதற்கு முன்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பயணிகள் சங்கங்கள் உள்ளிட்டோரின் கோரிக்கையின் அடிப்படையில் புதிய ரயில்கள் இயக்குதல், ரயில் நீட்டிப்பு செய்தல், போன்ற வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு ஆலோசனைகள் நடத்துவது வழக்கம்.
யார் யார் பங்கேற்பு?
அந்த வகையில் ரயில்வே நிர்வாகத்துடன் தென் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் மதுரை ரயில்வே காலனி வைகை அரங்கில் நடைபெற்றது. மதுரை ரயில்வே அலுவலகத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் பி.ஜி. மல்லையா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கனிமொழி, வைகோ, கார்த்தி சிதம்பரம், விஜய்வசந்த், சு.வெங்கடேசன், தனுஷ் எம். குமார், மாணிக்கம் தாகூர், ஞான திரவியம், ரவீந்திரநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
எதிரும் புதிரும்
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.பி.க்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவித்து பரஸ்பர நலம் விசாரித்த நிலையில், கார்த்தி சிதம்பரமும், மாணிக்கம் தாகூரும் மிகவும் இறுக்கமாகவே இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஒருவருக்கொருவர் பேசக்கூடவில்லை என்றும் இதற்கு காரணம் இளைஞர் காங்கிரஸ் தேர்தலும், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் அதிகாரத்தை கைப்பற்றும் விவகாரமும் தான் எனக் கூறப்படுகிறது.
மத்தியில்
இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் மத்தியில் அமர்ந்த கனிமொழி எம்.பியிடம் மட்டும் தனித்தனியாக இருவரும் பேசிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு இருவரும் தங்கள் ஆதரவாளரை கொண்டு வர தீவிரமாக காய் நகர்த்தி வருவது கவனிக்கத்தக்கது. இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான போட்டிக்கு கொங்குமண்டலத்தை சேர்ந்த ஒருவர் மாணிக்கம் தாகூரின் சாய்ஸ் என்றும் சிறுபான்மையின சமூகத்தை சேர்ந்த ஒருவர் கார்த்தி சிதம்பரத்தின் சாய்ஸ் எனவும் தெரிவிக்கப்படுகிறது.