‛பட்டாசு தொழிலாளர்கள் மீது கவனம்’.. மதுரை எய்ம்ஸ் கட்டுமான சுற்றுச்சூழல் அனுமதிக்கு புது நிபந்தனை
மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டி உள்ளது. இந்நிலையில் தான் விருதுநகர் மாவட்ட வெடிவிபத்தில் காயமடைவோருக்கு சிகிச்சை வழங்க உயர் தீக்காய சிகிச்சை பிரிவை உருவாக்குவது உள்ளிட்ட சில முக்கிய நிபந்தனைகளை மாநில சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு விதித்துள்ளது.
தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவனை இல்லாமல் உள்ளது. இந்நிலையில் தான் கடந்த 2015ம் ஆண்டு தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து 2019ல் பிரதமர் நரேந்திர மோடி மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.

224.24 ஏக்கரில் ரூ.1,264 கோடியில் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சுற்றுச்சுவர் கட்டும் பணி நடந்தது. அதன்பிறகு பணிகள் நடக்கவில்லை. ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனத்திடம் கடன் கிடைப்பதில் தாமதம், தமிழக அரசு நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் உள்ளிட்ட காரணங்களால் பணி முடங்கியது.
இந்நிலையில் தான் சமீபத்தில் மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்துக்கான நிதி என்பது ரூ.1977.80 கோடியாக உயர்த்தப்பட்டது. மேலும் பிற எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 750 படுக்கைகள் இருக்கும் நிலையில் இங்கு கூடுதலாக 150 படுக்கைகள் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 30 படுக்கையுடன் கூடிய ஆயுர்வேத சிகிச்சை மையம் அமைகிறது.
அதோடு 150 எம்பிபிஎஸ் மாணவர்கள், செவிலியர்கள் படிக்கும் வகுப்பறைகள் அமைக்கப்பட உள்ளது. தங்கும் விடுதிகள் உள்ளிட்டவையும் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் 2036ம் ஆண்டுக்குள் முடித்து மருத்துவமனை திறக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையே தான் கடந்த மாதம் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கான ஆயத்த பணிகள் தொடங்கியது.
அதோடு மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு தமிழக சுற்றுச்சூழல் அனுமதி என்பது தேவை. இதற்காக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வை தொடர்ந்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தமிழக சுற்றுச்சூழல் அனுமதி பெற மாநில சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதியின்போது சில நிபந்தனைகளை மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகத்துக்கு வழங்கி உள்ளது.
அதன்படி விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் வெடிவிபத்தில் காயமடைவோருக்கான உயர் தீக்காய சிகிச்சை பிரிவை உருவாக்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை மருத்துவமனை வளாகத்தில் பயன்படுத்த கூடாது. மருத்துவமனையில் சேரும் கழிவுகளை பயோ கேஸாக மாற்றி மருத்துவமனைக்கும், கேன்டீனில் சமைப்பதற்கும் ஏற்ற கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்'' என்பன போன்ற பரிந்துரைகளை வழங்கி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதனை சுற்றிய பல இடங்களில் ஏராளமான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. அவ்வப்போது இங்கு வெடிவிபத்து நிகழ்ந்து தொழிலாளர்கள் பலியாகி வருகின்றனர். இந்நிலையில் தான் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் வெடிவிபத்தில் காயமடைவோருக்கான உயர் தீக்காய சிகிச்சை பிரிவை உருவாக்கினால் உடனடியாக பட்டாசு தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும். இதனால் உயிரிழப்புகளை தடுக்கவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications