கொள்கை அரசியல் பேசாத சுந்தர்.சி.. சிக்கலாகும் சிறுபான்மை மக்கள் வாக்குகள்! மதுரை மத்தி நிலவரம் என்ன
மதுரை: மதுரை மத்திய தொகுதியில் என்டிஏ கூட்டணி வேட்பாளர் சுந்தர்.சி-யின் பிரச்சாரம் சோசியல் மீடியாவில் அதிக கவனத்தை பெற்றாலும், கள நிலவரம் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு சாதகமாக இருப்பதாக பார்க்கப்படுகிறது. சுமார் 20% இஸ்லாமியர்கள் அந்த தொகுதியில் இருப்பதால், சுந்தர்.சி கொள்கை சார்ந்த அரசியலை முன்னெடுப்பாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
சட்டசபைத் தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் என்டிஏ கூட்டணி வேட்பாளர் சுந்தர்.சி இடையிலான மோதல் உச்சத்தில் இருக்கிறது. மதுரை மாவட்ட அரசியலின் முக்கிய நிர்வாகிகளான எஸ்ஸார் கோபி மற்றும் மன்னன் தரப்பு சுந்தர்.சி-யை ஒவ்வொரு பகுதிக்கும் அழைத்து செல்கிறது. மதுரையின் பிரதான பிரச்சனைகளை சுந்தர்.சி பேச தொடங்கி இருக்கிறார்.

ஆனால் கொள்கை ரீதியிலான அரசியலை சுந்தர்.சி இதுவரை எங்கும் வெளிப்படுத்தவில்லை. மறுபக்கம் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கொள்கை ரீதியிலான அரசியலை தொடர்ச்சியாக முன்னிறுத்தி வருகிறார். இந்த தொகுதியில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கைகளே ஓங்கி இருப்பதாக பார்க்கப்படுகிறது.
இருந்தாலும் மாநகராட்சி ஊழல், குப்பை பிரச்சனை உள்ளிட்டவை தொடர்பாக சுந்தர்.சி பேசி வருவது சோசியல் மீடியாவிலும் கூட கவனத்தை பெற்று வருகிறது. அதற்கு பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும் டென்ஷனாகி பதில் அளித்திருக்கிறார். இதனால் சுந்தர்.சி-க்கு கூடுதல் மைலேஜ் கிடைத்திருப்பதாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சுந்தர்.சி-யால் வெல்ல முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மதுரை மத்திய தொகுதியை பொறுத்தவரை சுமார் 1.90 லட்சம் வாக்காளர்கள் இருக்கின்றனர். இதில் கடந்த தேர்தலில் பதிவான 1.48 லட்சம் வாக்குகளில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சுமார் 74 ஆயிரம் வாக்குகளை கைப்பற்றி வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஜோதி முத்துராமலிங்கம் 39 ஆயிரம் வாக்குகளை பெற்றார்.
இந்த முறை பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை எதிர்த்து சுந்தர்.சி இரட்டை இலை சின்னத்தில் களமிறக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியை பொறுத்தவரை காஜிமார் தெரு, நெல்பேட்டை, தத்தனேரி, மஹால் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர். சுமார் 35 ஆயிரம் இஸ்லாமியர்களின் வாக்குகள் இருக்கிறது.
இதன் காரணமாகவே தவெக தரப்பில் இஸ்லாமியரான முஸ்தபா களமிறக்கப்பட்டுள்ளார். ஆனால் மீனாட்சியம்மன் கோவிலை சுற்றியுள்ள பலரும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஆதரவாகவே இருக்கிறார்கள். இஸ்லாமியர்களின் வாக்குகளை திமுக கூட்டணி அதிகமாகவே அறுவடை செய்யும் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் திமுக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வாக்குகளும் பிடிஆர்க்கு கிடைக்கும்.
இதனால் சுந்தர்.சி முன்னிறுத்தும் பிரச்சனைகளை விடவும், திருப்பரங்குன்றம் விவகாரம் உள்ளிட்டவை மதுரையில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இதனால் கொள்கை ரீதியாக சுந்தர்.சி சில பிரச்சனைகளை பேசினால், அவரால் கூடுதல் வாக்குகளை பெற முடியும் என்று பார்க்கப்படுகிறது. ஆனால் புதிதாக அரசியலுக்குள் கால் பதித்துள்ள சுந்தர்.சி-யால் விரைவாக கொள்கை சார்ந்த அரசியலை பேச முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications