மதுரையில் மிக குறைந்த விலையில் வாகனங்களை வாங்க சூப்பர் வாய்ப்பு.. போலீஸ் முக்கிய அறிவிப்பு
மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையில் மதுவிலக்கு குற்றங்களில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வருகிற டிசம்பர் 30-ந் தேதி பொது ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 71 வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. ஏலத்தில் கலந்து கொள்வோர், வாகனத்திற்கு அரசு நிர்ணயித்துள்ள தொகையைவிட கூடுதலாக கேட்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் குற்றச்செயல்களில் தொடர்புடைய கார், பைக், சரக்கு வாகனங்கள் உள்பட பல்வேறு வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்கிறார்கள். அப்படி போலீசார் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் அரசுடமையாக்கப்படும். அந்த வாகனங்களை போலீசார் ஏலம் விடுவது வழக்கம். அப்படி ஏலம் விடப்படும் வண்டிகளை குறைந்த விலைக்கு மக்கள் அல்லது வாகன விற்பனையாளர்கள் வாங்க முடியும்.

இந்த ஏலம் அவ்வப்போது வாகனங்கள் சேரசேர மொத்தமாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் வாகனங்கள் வரும் டிசம்பர் 30ம் தேதி ஏலம் விடப்பட உள்ளது. கடந்த ஆண்டு ஏலத்தின் போது, ஏராளமான வாகனங்கள் குறைந்த விலைக்கு கிடைத்தன. பலர் போட்டி போட்டு வாகனங்களை வாங்கி சென்றனர். இந்த சூழலில் அடுத்த வாரம் நடைபெறும் ஏலத்தில் பங்கேற்க விரும்புவோருக்கு மதுரை காவல்துறை முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக மதுரை மாவட்ட போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "மதுரை மாவட்ட காவல்துறைக்குட்பட்ட குதிகளில் மதுவிலக்கு குற்றங்களில் சம்பந்தப்பட்டு கைப்பற்றப்பட்டு அரசுடமையாக்கப்பட்ட 71 வாகனங்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அர்விந்த் உத்தரவின்பேரில், மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வருகிற 30-ந்தேதி பொது ஏலம் விடப்படுகிறது. இதில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, மதுவிலக்கு துணை சூப்பிரண்டு, மதுரை மாவட்ட தானியங்கி பணிமனை மண்டல துணை இயக்குனர், மாவட்ட கலால் துணை ஆணையர் மற்றும் அதிகாரிகள் முன்னிலை வகிக்கின்றனர்.
இந்த வாகனங்கள், ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எனவே வாகனங்களை ஏலம் எடுக்க விரும்பும் ஏலதாரர்கள் அந்த வாகனங்களை பார்வையிட்டு முன்பணமாக இருசக்கர வாகனத்துக்கு ரூ.5 ஆயிரம் மற்றும் மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனத்துக்கு ரூ.10 ஆயிரத்தை 26-ந்தேதி முதல் 28-ந்தேதிகளில், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள மதுவிலக்கு அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்று ஏலத்தில் கலந்து கொள்ளலாம். ஏலத்தில் கலந்து கொள்வோர் அரசு நிர்ணயித்த மதிப்பீட்டுத் தொகைக்கு அதிகமாக ஏலம் கேட்கவேண்டும்" இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications