தமிழகத்தின் அதிக வயதான பஞ்சாயத்து தலைவி.. தள்ளாத வயதிலும் சாதனை.. யார் இந்த வீரம்மாள்?
மதுரை: தமிழகத்தின் மிகவும் மூத்த பஞ்சாயத்து தலைவர் யார் தெரியுமா? அவர்தான் மதுரையை சேர்ந்த அரிட்டாப்பட்டி கிராம பஞ்சாயத்து தலைவர் வீரம்மாள் பாட்டி.
தமிழகத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் இரு கட்டங்களாக கடந்த 2020 இல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களைத் தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் மதுரை மாவட்டம் மேலூர் ஒன்றியத்திற்குள்பட்ட அரிட்டாபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு மூதாட்டி வீரம்மாள் போட்டியிட்டார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்டவரை விட 195 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இந்த பதவிக்கு இந்த மூதாட்டி இரு முறை போட்டியிட்டு தோல்வி அடைந்த நிலையில் மீண்டும் விடாமுயற்சியுடன் போட்டியிட்டு 3ஆவது முறையாக வெற்றியை சுவைத்துள்ளார்.
மூதாட்டிக்கு வயது 89 ஆகும். இந்த தள்ளாத வயதிலும் வீரம்மாள் உற்சாகத்துடனும் சுறுசுறுப்புடனும் பணியாற்றி வருகிறார். இவரை அண்மையில் ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹு நேரில் சந்தித்தார். அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: வீரம்மாள் பாட்டியை நான் சந்தித்த போது இந்த வயதிலும் நல்ல சுறுசுறுப்புடன் பணியாற்றிக் கொண்டிருந்தார். அதற்கு பாரம்பரிய உணவுகளான திணையை அவர் உட்கொண்டார். அவரிடமே இந்த ரகசியத்தை கேட்டேன். அதற்கு அவர் வீட்டு சமையலைதான் சாப்பிடுவேன் என்கிறார். மேலும் விவசாய பணிகளையும் செய்வதாகவும் தெரிவித்தார்.
அது போல் அரிட்டாப்பட்டி ஊராட்சியில் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்து அன்றாட பணிகளை ஓய்வின்றி தொடர்ந்து செய்து வருகிறார். மதுரையின் முதல் பல்லுயிர் தளமாக இந்த அரிட்டாப்பட்டி ஊராட்சியை தனது தலைமையில் வீரம்மாள் உருவாக்கியுள்ளார்.
பெண்களின் முன்னேற்றத்திற்காக அவர் நிறைய செய்துள்ளார். அவரது சிறந்த பங்களிப்பிற்காக அவருக்கு விலைமதிப்பில்லாத விருதை கொடுக்க வேண்டும் என சுப்ரியா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications