கையும் களவுமாக பிடிபட்ட தாசில்தாருக்கு நெஞ்சு வலி.. மருத்துவமனைக்கு தூக்கி சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை!
மதுரை: 1 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கையும் களவுமாக பிடிபட்ட தாசில்தாரிடம் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோதே அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அதிகாரிகள் அவரை உடனடியாக தங்கள் ஜீப்பிலேயே ஏற்றிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மதுரையைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர், ஆண்டிபட்டியை அடுத்துள்ள தேக்கம்பட்டி என்ற கிராமத்தில் இருக்கும் அவருக்குச் சொந்தமான இடத்தில் பெட்ரோல் பங்க் வைப்பதற்கான வேலைகளை செய்து வந்துள்ளார். பெட்ரோல் பங்க் வைப்பதற்கு வருவாய்த் துறையின் தடையில்லா சான்று பெற வேண்டி, சுப்பிரமணி ஆண்டிப்பட்டி வட்டாட்சியர் காதர் ஷெரீப்பிடம் விண்ணப்பித்துள்ளார்.

அப்போது, தடையில்லா சான்று வழங்குவதற்கு தனக்கு ரூ.1 லட்சம் பணம் வேண்டும் என சுப்பிரமணியிடம் தாசில்தார் காதர் ஷெரீப் கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சுப்பிரமணி தேனி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சுந்தர்ராஜனிடம் புகார் கொடுத்துள்ளார். இதனை அடுத்து, சுப்பிரமணியிடம் ரசாயனம் தடவப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை போலீசார் கொடுத்து அனுப்பியுள்ளனர்.
ரசாயனம் தடவிய பணத்துடன் சென்ற சுப்பிரமணியனை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தூரத்தில் இருந்தபடி கண்காணித்துள்ளனர். அந்தப் பணத்தை சுப்பிரமணி, ஆண்டிப்பட்டி தாசில்தாரிடம் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தாசில்தார் காதர் ஷெஷீப்பை கையும் களவுமாக பிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சுந்தர்ராஜன் தலைமையிலான பத்துக்கும் மேற்பட்ட போலீசார், தாசில்தார் அறைக்குள் சென்று தாசில்தார் காதர் ஷெரீப்பிடம் விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, தாசில்தார் காதர் ஷெரிப்பிற்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து தாசில்தாரை கைத்தாங்கலாக அழைத்து வந்து போலீஸ் ஜிப்பில் ஏற்றிக் கொண்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும், இந்த லஞ்சம் பெற்ற விவகாரம் குறித்து தேனி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications