பொங்கல் பரிசு 1000, 2000 எல்லாம் வேண்டாம்.. ரவுண்டா 30 ஆயிரமா கொடுத்துருங்க! செல்லூர் ராஜூ ஒரே போடு!
மதுரை: தமிழ்நாடு அரசின் சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என அரசு அறிவித்திருக்கிறது. அதே நேரத்தில் பணப்பரிசு வழங்கப்படாது என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறி உள்ளார். இந்நிலையில் தமிழக அரசு பொங்கல் பரிசாக 30ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டுமென அதிரடியாகக் கூறியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சரான செல்லூர் ராஜூ.
2025-ஆம் ஆண்டு தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் 2,20,94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறுவார்கள். இதனால் அரசுக்கு ரூபாய் 249.76 கோடி செலவு ஏற்படும். மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு. அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பொங்கல் பரிசு தொகுப்பு:
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இவற்றையும் சேர்த்து வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் பணப்பரிசு வழங்குவது தொடர்பான அறிவிப்பு இல்லை. இதனால் மக்கள் கடும் ஏமாற்றமடைந்த நிலையில், நடப்பாண்டில் பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதில், நிதிச்சுமை காரணமாக கடினமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்திருந்தார்.
பொங்கல் ரொக்க பரிசு:
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் 500 ரூபாய் முதல் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்க பரிசும் வழங்கப்பட்டு வருகிறது. கடைசியாக 2021 இல் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 2500 ரூபாய், அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டது. தொடர்ந்து திமுக ஆட்சி அமைந்த பிறகு 2022 ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு தரமற்று வழங்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் 2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை உடன் ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.
மக்கள் ஏமாற்றம்:
இந்த நிலையில் இந்த ஆண்டும் ரொக்க பரிசு வழங்கப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில் அது தொடர்பான அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் குடும்ப அட்டைதாரர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொங்கல் ரொக்கப் பரிசு வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
செல்லூர் ராஜூ:
இந்நிலையில், தமிழக அரசு பொங்கல் பரிசாக 30ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டுமென அதிரடியாகக் கூறியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சரான செல்லூர் ராஜூ. மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," 2025ஆம் ஆண்டு அதிமுகவிற்கு எழுச்சியான ஆண்டாக இருக்கும். 2025ஆம் ஆண்டில் விடியா அரசிடமிருந்து தமிழக மக்களுக்கு விடியல் கிடைக்கும். தமிழக மக்களுக்கு விடியல் கிடைப்பதற்கான பயணத்தை அதிமுக முன்னெடுத்துச் செல்லும்.
அதிமுக:
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஏற்பட்ட வன்கொடுமை இனி தமிழகத்தில் எந்த பெண்ணுக்கும் நடக்கக்கூடாது. தமிழகம் அமைதி பூங்காவாக திகழ அதிமுக ஆட்சி அமைய வேண்டும். சட்டமன்றத் தேர்தல் கூட்டணி அமைவதையும் ஒருங்கிணைந்த அதிமுக தேர்தல் களத்தை சந்திப்பதையும் எடப்பாடி பழனிச்சாமி முடிவெடுப்பார். தமிழக மக்களுக்காக அரசியல் செய்யக்கூடிய கட்சியாக அதிமுக திகழ்ந்து வருகிறது என 63 சதவீத மக்கள் வாக்களித்து உள்ளனர்.
30 ஆயிரம் வழங்க வேண்டும்:
2025 ஆண்டு அதிமுகவிற்கு எழுச்சி தருகிற ஆண்டாகவும் மகிழ்ச்சி தருகிற ஆண்டாகவும் திகழும். திமுக அரசு உண்மையாகவே மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என்றால் ஒரு குடும்பத்திற்கு 30,000 ரூபாய் பொங்கல் பரிசு வழங்க வேண்டும். அதிமுக ஆட்சியில் 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்" என்றார்.












Click it and Unblock the Notifications