தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் பெய்த மழையால் சட்டென்று மாறிய வானிலை - 2 இளைஞர்கள் பலி
தமிழகத்தில் பல மாவட்டங்களில் நேற்று இடி மின்னலுடன் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் கோடையின் வெப்பம் தணிந்து குளுமை பரவியது.
மதுரை: தமிழகத்தில் நேற்றைய தினம் வெயில் சுட்டெரித்தாலும் மாலை நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து மழை இடி மின்னலுடன் மழை பெய்தது. திருநெல்வேலி, மதுரை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. பெரம்பலூரில் மின்னல் தாக்கி 2 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
கோடை காலம் என்றாலே சுட்டெரிக்கும் வெயில் மட்டுமல்ல அவ்வப்போது கோடைக்கு இதமாக இடியும் மின்னலுமாக பெய்யும் மழையும் பலரது நினைவுக்கு வரும். தமிழகத்தில் டிசம்பர் மாதத்துடன் மழை விடைபெற்ற நிலையில் ஜனவரியில் திடீரென மழை கொட்டி வெள்ளம் ஏற்பட்டது.
குளிர்காலம் முடிந்து பிப்ரவரி முதலே வெயில் வாட்டத் தொடங்கியது. மார்ச் மாதத்திலேயே அதிகபட்ச வெப்பம் பதிவானது. பல ஊர்களில் வெப்பநிலை சதமடித்தது. சில ஊர்களில் லேசான சாரல் மழையும் பெய்து குளிர்ச்சியூட்டியது.

கோடை மழை
இந்த நிலையில் இலங்கை மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மற்றும் வெப்பச்சலனம் காரணமாக குமரி, நெல்லை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி நேற்று மாலை மதுரை மாவட்டம் டி.குண்ணத்தூர், டி.கல்லுப்பட்டியில் கனமழை பெய்தது.

மதுரையில் கொட்டித் தீர்த்த மழை
மதுரையில் கோரிப்பாளையம், தமுக்கம், நெல்பேட்டை, பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பொழிந்தது. நீண்டநாட்களுக்கு பிறகு பெய்த இந்த மழை, மதுரை மண்ணை குளிர்வித்தது. பழனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஆயக்குடி, கணக்கன்பட்டி, கலையமுத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் சாரல் மழை பெய்தது.

குளிர்ந்த கொடைக்கானல்
இதேபோல, கொடைக்கானலில் அப்சர்வேட்டரி, ஏரிச்சாலை, மூஞ்சிக்கல், அண்ணா சாலை, செண்பகனூர், பெருமாள் மலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டியது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால், வெள்ளி நீர் வீழ்ச்சி, வட்டக்கானல் அருவி உள்ளிட்ட பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்து, தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது

தென் மாவட்டங்களில் குளுமை
திருநெல்வேலி மாநகரில் நேற்று மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பகலில் வெயில் வாட்டி வதைக்க, மாலையில் பெய்த மழை, மக்களை குளிர்வித்தது. தேனி மாவட்டம் பெரியகுளம், லட்சுமிபுரம், கும்பக்கரை அருவி, சோத்துப்பாறை அணை பகுதிகளில் தொடர்ந்து இரண்டாவது நாளாக மழை பெய்தது. கோடை வெப்பம் தணிந்து குளுமை பரவியது.

விவசாயிகள் மகிழ்ச்சி
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை, வாணியம்பாடியில் கொட்டி தீர்த்த கனமழையால், சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல, ஈரோடு மாவட்டம் கோபி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேலாக ஒரு மணி நேரத்திற்கும் கனமழை பெய்தது. கோடைமழையால், மானாவாரி பயிர் சாகுபடிக்கு தண்ணீர் வசதி கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

2 பேர் பலி
இன்றும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. பெரம்பலூர் கோனேரிபாளையத்தில் மழையின்போது சாலையோரம் ஒதுங்கி நின்ற 3 இளைஞர்கள் மீது மின்னல் தாக்கியது. இதில் ராமர் மற்றும் செல்லத்துரை ஆகிய இளைஞர்கள் உயிரிழந்தனர். நாளைய தினம் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.












Click it and Unblock the Notifications