உச்சி சூரியனே எங்களை ஒன்றும் செய்ய முடியாத போது உதயசூரியன் என்ன செய்துவிட முடியும்! - தமிழிசை
மதுரை: உச்சி சூரியனே எங்களை ஒன்றும் செய்ய முடியாது போது உதயசூரியன் என்ன செய்துவிட முடியும் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவை முடித்து கொண்டு பாஜக நடத்திய பொதுக் கூட்டத்திலும் நரேந்திர மோடி பங்கேற்றார்.
அப்போது பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பேசினார். அவர் பேசுகையில் தமிழகத்தில் இங்கே காவி துண்டு, காவி தொப்பி என எங்கு பார்த்தாலும் காவிமயமாகி கொண்டிருக்கிறது என்பதை இந்த கூட்டம் காண்பிக்கிறது என்பதை தமிழகமும் பாரத தேசமும் கவனிக்கட்டும்.
மீனாட்சியின் அருளுடன் பிரதமர் நரேந்திர மோடி 2019-இல் மீண்டும் பாரத பிரதமராக பதவியேற்பார் என்பதை இந்த லட்சோப லட்ச கூட்டம் உணர்ச்சிகரமாக காண்பித்து கொண்டிருக்கிறது.
இந்த லட்சக்கணக்கான தாமரை மலர மலர (தொண்டர்களை கைகாட்டி சொன்னார்) சூரியனை எங்கே காணோம். உங்களை பார்த்து பயந்து சூரியன் மறைந்து விட்டது என்றார் தமிழிசை.