Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாதவி நீதிபதியாக இருக்கும் இடத்தில் கண்ணகிக்கு நீதி கிடைக்காது.. தமிமுன் அன்சாரி ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மாதவி நீதிபதியாக இருக்கும் இடத்தில் கண்ணகிக்கு நீதி கிடைக்காது என்றும், எழுதுகோலில் நீல நிற மை இருக்கலாம்! காவி இருக்கக் கூடாது என்றும் விசிக எம்எல்ஏ தமிமுன் அன்சாரி பதிவிட்டுள்ளார். மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் நேற்று பிறப்பித்த தீர்ப்பை விமர்சிக்கும் வகையில் தமிமுன் அன்சாரி இந்த பதிவினை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முருகப்பெருமானின் முதற்படை வீடு என்ற சிறப்புக்குரியது மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காசிவிசுவநாதர் கோவில், தீபத்தூண் உள்ளிட்டவை உள்ளன. அங்கு சிக்கந்தர் தர்காவும் இருக்கிறது. இந்த தர்காவில் இஸ்லாமியர்கள் வழிபட்டு வருகிறார்கள்.

Tamimun Ansari attacks Judge GR Swaminathan over lamp at the Thiruparankundram temple


திருப்பரங்குன்றம் மலை உச்சி

முருகப்பெருமானின் முதற்படை வீடு என்பதால் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள
தீபத்தூணில் கார்த்திகை தீபத்திருவிழா அன்று தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்து அமைப்புகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றன. இதற்கு எதிர்ப்பும் உள்ளது. அதேநேரம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் பல ஆண்டுகளாக உச்சிப்பிள்ளையார் கோவில் பகுதியில் தீபக்கொப்பரை அமைத்து தீபம் ஏற்றப்பட்டு வந்தது.

தீபத்தூணில் கார்த்திகை தீபம்

இதனிடையே மதுரை மாவட்டம் எழுமலையைச் சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர், இந்த ஆண்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 3 நாட்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கி இருந்தார். அதில், இந்த ஆண்டு முதல் திருப்பரங்குன்றம் மலையின்மேல் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கூறியிருந்தார்.

உயர்நீதிமன்றத்தில் முறையீடு

இந்த உத்தரவுக்கு எதிராக திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் உடனடியாக விசாரணைக்கு ஏற்கப்படவில்லை. இதையடுத்து வழக்கம் போல் உச்சிப்பிள்ளையார் கோயிலில் அருகே மலையில் தீபம் ஏற்ற ஏற்பாடுகள் நேற்று நடந்து வந்தது. அதே நேரத்தில் தீபத்தூணில் தீபம் ஏற்றவும் ஒரு சில ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இரண்டு இடங்களிலும் தீபம் ஏற்றப்படும் என எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால் மாலை 6 மணி அளவில், உச்சிப்பிள்ளையார் கோவில் பகுதியில் கொப்பரையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. ஆனால் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாது என தெரிவிக்கப்பட்டது.

இந்து அமைப்புகள் போராட்டம்

இதனால் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் உடனடியாக போராட்டத்தில் இறங்கினார்கள். இந்து அமைப்பினர் ஏராளமானவர்கள் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் 16 கால் மண்டபம் அருகே திரண்டு கந்த சஷ்டி கவசம் பாடினர். இதனால் போலீசாருக்கும், இந்து அமைப்பினர், பக்தர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த பகுதியில் பதற்றம் நிலவியது. பெரும் அளவு போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

நீதிபதி உத்தரவு

இதற்கிடையே பிற்பகலில் தீபத்தூணில் தீபம் ஏற்றும் உத்தரவை, திருப்பரங்குன்றம் கோவில் அதிகாரிகள் சரிவர நிறைவேற்றவில்லை என்றும், எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நேற்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனிடம் வக்கீல் அருண் சுவாமிநாதன் உள்ளிட்டோர் முறையிட்டார்கள். அப்போது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், உங்களது கோரிக்கை குறித்து மனுவாக தாக்கல் செய்யும் பட்சத்தில் உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறினார்.

அவமதிப்பு வழக்கு

இதையடுத்து இந்த கோரிக்கை குறித்து, கோர்ட்டு அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மாலை 5 மணி அளவில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கோவில் செயல் அலுவலர் ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. பின்னர் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி, மாலை 6 மணிக்கு மேல்தான் கார்த்திகை தீபம் மலை உச்சியில் ஏற்றப்பட உள்ளது. ஆனால் முன்கூட்டியே அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்து இருப்பது சட்டவிரோதம் என்று வாதிட்டார்.

கோவில் நிர்வாகத்திற்கு கண்டனம்

இதையடுத்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், "திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பித்து இருந்தேன். இந்த உத்தரவுக்கு எதிராக உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், உச்ச நீதிமன்றம் எந்த தடையும் இதுவரை பிறப்பிக்கவில்லை. மேலும் இந்த விவகாரத்தில் மனுதாரர் கோரிக்கை எழுப்ப அரசியலமைப்பு சட்டத்தின்படி உரிமை உண்டு. அதுமட்டுமல்லாமல் அரசு தரப்பு தகவலை ஏற்று இந்த வழக்கை மாலை 6.05 மணி வரை ஒத்தி வைத்திருந்தேன். அப்போது வரை மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படவில்லை. கோவில் நிர்வாகத்தின் இந்த நடைமுறை ஏற்புடையது கிடையாது.

சி.ஐ.எஸ்.எப். பாதுகாப்புடன் செல்ல உத்தரவு

எனவே திருப்பரங்குன்றம் மலையில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வழக்கு தொடர்ந்த ராம ரவிக்குமார் உள்ளிட்ட சிலர் உடனே திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு சென்று தீபத்தூணில் தீபம் ஏற்றலாம். அவர்களுக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள சி.ஐ.எஸ்.எப். (மத்திய தொழில் பாதுகாப்பு படை) கமாண்டன்ட் தலைமையிலான படையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

144 தடை உத்தரவு பிறப்பித்த கலெக்டர்

இதையடுத்து அதிகாரிகள் உள்பட 67 சி.ஐ.எஸ்.எப். வீரர்கள் துப்பாக்கி ஏந்தி திருப்பரங்குன்றம் சென்றனர். ஆனால் அதற்குள் மதுரை கலெக்டர் பிரவீன்குமார், திருப்பரங்குன்றத்தி்ல் 144 தடை பிறப்பித்து இருப்பதாக உத்தரவிட்டார். அந்த உத்தரவு நகலை காண்பித்து பக்தர்கள் கலைந்து செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினார்கள். எக்காரணம் கொண்டும் 144 தடையை மீறி மலைக்கு யாரையும் அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக போலீசார் மறுத்தனர். இதற்கு இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் போலீசார் 16 கால் மண்டபம் தொடங்கி திருப்பரங்குன்றம் மலை உள்ளிட்ட பகுதிகளை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இந்த விவகாரத்தால் திருப்பரங்குன்றம் பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

மாதவி நீதிபதி

இந்த விவகாரத்தில் திமுக கூட்டணி கட்சியினர் கடும் எதிர்வினையாற்றி வருகிறார்கள். அந்த வகையில் விசிக எம்எல்ஏ தமிமுன் அன்சாரி கூறுகையில், மாதவி நீதிபதியாக இருக்கும் இடத்தில் கண்ணகிக்கு நீதி கிடைக்காது என்றும், எழுதுகோலில் நீல நிற மை இருக்கலாம்! காவி
இருக்கக் கூடாது என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+