டாஸ்மாக் மூடப்படுகிறது.. திருச்சி, கிருஷ்ணகிரிக்கு டைம்! மதுவிலக்கை அரசு அமலாக்கலாம்: மதுரை ஹைகோர்ட்
திண்டுக்கலை சேர்ந்த கண்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.. பொதுநல வழக்காக தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில் உள்ளதாவது:

பொதுநல மனு தாக்கல்
"மனு:திண்டுக்கல் - திருச்சி சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் சாலையை பயன்படுத்துவோருக்கு, மது அருந்துவோரால் இடையூறு ஏற்படுகிறது. கடையை மூட உத்தரவிட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த பொதுநல வழக்கானது, நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் நிர்வாகத்தின் திண்டுக்கல் மேலாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், "மனுதாரர் குறிப்பிட்டிருக்கும் தூரம் தவறானது. அதோடு வணிக பகுதியில் மதுக்கடை அமைந்திருந்தால் அதற்கு தூர கட்டுப்பாட்டு விதிகள் பொருந்தாது" என்று தெரிவிக்கப்பட்டது.
2 வேறு பள்ளிகள்
டாஸ்மாக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "இரு வெவ்வேறு பள்ளிகள் 30 மற்றும் 50 மீட்டரில் அமைந்துள்ளன. வழிபாட்டுத்தலம் குறுகிய துாரத்திலும், அரசு மருத்துவமனை 100 மீட்டரிலும் அமைந்துள்ளதாக மனுதாரர் கூறுவது தவறானது. பள்ளி, வழிபாட்டுத்தலம், மருத்துவமனையிலிருந்து 50 மீட்டருக்கு அப்பால் டாஸ்மாக் இருக்க வேண்டும் என்ற தூர கட்டுப்பாடு விதிமுறை இப்பகுதிக்கு பொருந்தாது" என்றார்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவானது: சில சூழ்நிலைகளில் தூர அளவுகோலை கடைப்பிடிப்பது சரியானதல்ல என இந்த நீதிமன்றம் கருதுகிறது. ஒரு டாஸ்மாக் கடை வாயிலாக, அந்த பகுதியில் சாலையை பயன்படுத்துவோருக்கு, குறிப்பாக பள்ளி நேரங்களில் குழந்தைகளுக்கு தொந்தரவு ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.
ஊட்டச்சத்து, வாழ்வின் தரம்
பொதுமக்களுக்கு இதுபோல இடையூறு ஏற்படாமல் பார்ப்பது மாநிலத்தின் கடமை. இந்திய அரசமைப்புச் சட்ட படி, ஊட்டச்சத்து தரத்தையும், வாழ்வின் தரத்தையும் உயர்த்துவதும், சுகாதாரத்தை மேம்படுத்துவதும் மாநிலத்தின் முதன்மையான கடமையாக கருத வேண்டும்.
மக்கள் நல அரசு, ஒருபுறம் அதிக மருத்துவமனைகளை நிறுவி, மறுபுறம் ஒரே நேரத்தில் டாஸ்மாக் கடைகளை நிறுவுவது முரண்பாடானது.
இழுத்து மூடுங்க டாஸ்மாக்கை
அரசியலமைப்போடு இது ஒத்துப்போவதில்லை. பொது சுகாதாரத்தை பாதிக்கும் டாஸ்மாக் கடைகளை நிறுவுவதற்கு பதிலாக, மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த முழுமனதுடன் மக்கள் நல அரசு பாடுபட வேண்டும். மதுவிலக்கை படிப்படியாக மெதுவாக அமல்படுத்தப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
தூர வரம்பு தொடர்பான நிர்வாக உத்தரவுகள் அல்லது விதிமுறைகள் மட்டும் எந்தவொரு சட்டப்பூர்வமான முடிவெடுப்பதற்கும் அடிப்படையாக அமைய முடியாது. டாஸ்மாக் கடை நிச்சயம் இடையூறாக இருக்கும். எனவே திண்டுக்கல் - திருச்சி சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை 2 வாரங்களில் மூட வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications