மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியான சேதி..! டைடல் பார்க் பணிகளுக்கு டெண்டர் வெளியீடு.. விரைவில் பணிகள்!
மதுரை : மதுரையில் அமையவுள்ள டைடல் பார்க் பணிகளுக்கு டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. மதுரை மாட்டுத்தாவணியில் அமையவிருக்கும்
டைடல் பார்க் வடிவமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளது. இதனால், பணிகள் விரைவாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மதுரையில் டைடல் பார்க் அமைக்கப்படும் என அறிவித்தார். "அறிவு சார்ந்த தொழில்களுக்கான முக்கிய மையமாக மதுரையை மாற்றும் வகையில் டைடல் மற்றும் மதுரை மாநகராட்சி இணைந்து முன்னோடி டைடல் பார்க் மதுரையில் நிறுவப்பட இருக்கிறது. இந்த பூங்கா டைடல் நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டு இயக்கப்படும். மதுரையின் மையப்பகுதியான மாட்டுத்தாவணியில் இரண்டு கட்டங்களாக இந்த பூங்கா கட்டப்படும்" எனத் தெரிவித்தார்.

முதற்கட்டமாக ரூ.600 கோடியில் 5 ஏக்கரில் இது அமைக்கப்படும் என்றும், இரண்டாம் கட்டமாக மேலும் ஐந்து ஏக்கரில் விரிவாக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த டைடல் பார்க் மூலம் 10,000 போ் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து டைடல் பார்க் அமைப்பதற்கான இடத்தேர்வு பணிகள் நடந்து வருகின்றன. இதுகுறித்து ஏற்கனவே மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனர்.
இதையடுத்து, கட்டுமான வரைபடம் தொடர்பான பணிகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் டெண்டர் விடுவதற்கான பணிகளை தொழில்துறை மேற்கொண்டு வருகிறது என்று தகவல் வெளியானது. இந்நிலையில், தற்போது மதுரை மாட்டுத்தாவணியில் அமையவுள்ள டைடல் பார்க் வடிவமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications