எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம்.. ஜாதி பிரச்சினை இல்லையே! கரூர் திருவிழா..நீதிமன்றம் முக்கிய ஆர்டர்
மதுரை: கரூர் நெரூர் சத்குரு சதாசிவம் பிரம்மேந்திராள் ஜீவ சமாதி கோயிலில் வரும் மே - 18 ஆம் தேதி நடக்கவுள்ள ஆராதனை விழாவின் போது , பக்தர்கள் உணவருந்திய பிறகு அந்த இலையில், பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் வேண்டுதலை நிறைவேற்ற அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கில், பக்தர்கள் உணவை உட்கொண்ட பிறகு, வாழை இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய தடை இல்லை எனவும், விழாவில் ஜாதிப் பாகுபாடு இல்லை என்பது தெளிவாகிறது என உயர்நீதிமன்ற கிளை கூறியுள்ளது.

கரூர் நெரூரை சேர்ந்த நவீன்குமார், உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில்," நெரூர் சத்குரு சதாசிவம் பிரம்மேந்திராள் ஜீவ சமாதி கோயிலில் வரும் மே - 18 ஆம் தேதி நடக்கவுள்ள ஆராதனை விழாவின் போது , பக்தர்கள் உணவருந்திய பிறகு , அந்த இலையில், அங்கப்பிரதட்சணம் வேண்டுதலை நிறைவேற்ற பக்தர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்.
காரணம் இக்கோயிலில் சுமார் 100 வருடங்களாக நடைபெற்று வரும் திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியாக பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்காக கோயிலுக்கு தரிசனத்திற்கு வந்துள்ள பக்தர்கள் அனைவரும உணவு உண்ட பின்பு சாப்பிட்ட எச்சில் இலையில் உருண்டு அங்கபிரதட்சணம் செய்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவது வழக்கம்.. எனவே அனுமதி வழங்க வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சுவாமி நாதன் முன் விசாரணைக்கு வந்தது. இதை தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், கிராமங்களில் வழக்கமான மத நிகழ்வுகளை நடத்துவதற்கு அதிகாரிகளின் அனுமதி தேவையில்லை. விழா ஏற்பாட்டாளர்கள் ஒலி பெருக்கிகள் பொருத்த வேண்டும் உள்ளிட்ட காரணங்களுக்காக மட்டுமே அனுமதி பெற வேண்டும் .
எனவே , மனுதாரருக்கு அனுமதி வழங்குவது பற்றிய கேள்வி எழவே இல்லை. ஜாதிப் பாகுபாடு இல்லை என்பதை தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. பக்தர்கள் உணவை உட்கொண்ட பிறகு, வாழை இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய தடை இல்லை. வழிபாட்டு உரிமை, அடிப்படை உரிமையை மனுதாரர் நன்றாகப் பயன்படுத்த முடியும் .இதில் மற்றவர்கள் தலையிட முடியாது. எனவே இந்த விழா நடத்த அனுமதி வழங்கப்படுகிறது" என உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications