400மீ யானை மலைமீது ஏறிய கம்யூனிஸ்ட் கட்சியினர்.. மணிப்பூர் சம்பவத்திற்கு கண்டனம்! மதுரையில் பரபர
மதுரை: மணிப்பூரில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மதுரை யானை மலைமீதேறி கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.
அரசியல் ஆதாயத்திற்காக மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக இருக்கும் மெய்டெய் மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதாக பாஜக அறிவித்திருந்தது. இந்நிலையில் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பழங்குடி சமூகமான குக்கி மக்களான இதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். மெய்டெய் சமூகத்தினரும் ஊர்வலம், போராட்டத்தில் குதிக்க நிலைமை வன்முறையாக வெடித்தது.

மே 4ம் தேதி தொடங்கிய இந்த வன்முறையானது தற்போதுவரை 160க்கும் அதிகமானவர்களை கொன்று குவித்துள்ளது. ஏராளமான பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். இந்த வன்முறையின் உச்சமாக மே மாதம் 4ம் தேதி குக்கி மற்றும் ஜோ பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் வன்முறையாளர்களால் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இது தொடர்பான வீடியோ நேற்று வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
மணிப்பூர் பாஜக முதலமைச்சரை டிஸ்மிஸ் செய்துவிட்டு அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல இந்த பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக மே மாதம் 14-ம் தேதி வாக்கில் போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்தும், நேற்று வீடியோ வெளியாகி போராட்டங்கள் நடந்து, நாடாளுமன்றம் முடங்கிய பின்னர்தான் காவல்துறை ஒவ்வொரு நபராக கைது செய்ய தொடங்கியுள்ளது.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களில் ஒருவர் பேட்டியளிக்கையில், "போலீசார்தான் எங்களை வன்முறையாளர்களிடம் ஒப்படைத்தனர்" என்று கூறியிருந்தார். இது போராட்டத்தின் தீவிரத்தை மேலும் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் உள்ள 400மீ உயர யானை மலை மீது ஏறி 100க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத பாஜக அரசை கண்டித்தும், பழங்குடியின பெண்களை நிர்வாணமாக அழைத்துச் சென்றவர்களை உடனடியாக கைது செய்யக் கோரியும் இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. சம்பவம் அறிந்து யானைமலைக்கு சென்ற போலீசார் போராட்டக்காரர்களிடையே பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications