மதுரையில் ரூ. 10 க்கு உணவு வழங்கி வந்த ராமு தாத்தா காலமானார்...மக்கள் சோகம்!!
மதுரை: மதுரையில் ஒரு ரூபாய்க்கு உணவு வழங்கி, பின்னர் பத்து ரூபாய்க்கு காய்கறிகளுடன் முழு சாப்பாடு வழங்கி வந்த பிரபல ராமு தாத்தா இன்று காலமானார். இவருக்கு வயது 89.
மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே சிறிய பெட்டிக்கடை நடத்தி பத்து ரூபாய்க்கு உணவு வழங்கி, மதுரை மக்களின் இதயத்தில் மட்டும் இல்லாது அந்த பேருந்து நிலையத்திற்கு வந்து செல்பவர்களின் மனதிலும் இடம் பிடித்தவர் ராமு தாத்தா. அவரது வழங்கிய உணவின் விலை மிக மிக குறைவு என்பதுடன் அவரது உணவுடன் சேர்த்து அன்பும் பரிமாறப்படும். இந்த அன்பு மேலும் மேலும் அவரது கடைக்கு வாடிக்கையாளர்களை ஈர்த்தது.

1987ல் வள்ளலாரின் சத்திய ஞான சபைக்கு சென்ற ராமு தாத்தாவுக்கு, பொது மக்களுக்கு எதாவது ஒரு வகையில் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எழுந்துள்ளது. இதன் வெளிப்படாக 1967ல் உணவு கடை திறந்துள்ளார். துவக்கத்தில் ஒன்னே கால் ரூபாய்க்கு உணவு வழங்கியுள்ளார். சாப்பாட்டுடன் சுவையான கூட்டு, தினமும் ஒரு காய்கறி என்று பறிமாறியுள்ளார்.
நாளடைவில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்க, 2, 5, 10 ரூபாய் என்று சாப்பாட்டின் விலையை அதிகரித்தார். ராஜாஜி மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்று அனைத்து அண்ணா பேருந்து நிலையம் அருகே அமைந்து இருக்க அங்கு வருபவர்கள் ராமு தாத்தா கடைக்கும் உணவு சாப்பிட வருவார்கள். சாப்பாடு, குழம்பு, காய்கறி, கூட்டு என்று வழங்கி வந்தார். இவருக்கு அவரது மனைவி பூரணத்தம்மாளும் துணையாக இருந்துள்ளார். இவர்களுக்கு 4 மகன்கள், 3 பெண்கள் உள்ளனர். இருந்தபோதும், இறுதி வரை தனது கடையில் சிரித்த முகத்துடன் வருபவர்களுக்கு உணவு வழங்கி வந்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி இறந்துவிட கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த ராமு தாத்தா இன்று காலமானார். இவரது இறப்பு அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications