லஞ்சம் வாங்க மாட்டேன்...என் பேர சொல்லி கேட்டாலும் குடுக்காதீங்க-அசத்தும் மதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர்..
மதுரை: நானும் லஞ்சம் வாங்க மாட்டேன் , எனது பெயரை சொல்லி யார் கேட்டாலும் லஞ்சம் கொடுக்க வேண்டாம் என மதுரை ஒத்தக்கடை காவல்நிலைய ஆய்வாளர் சரவணன் காவல்நிலைய வாசலில் வைத்துள்ள போர்டு சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பட்டா வழங்க லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் கைது, ஒப்பந்தம் வழங்க லஞ்சம் கேட்ட பொறியாளர் கைது, வழக்கை விசாரிக்க லஞ்சம் கேட்ட காவல் ஆய்வாளர் கைது என லஞ்சம் குறித்த செய்திகள் தமிழகத்தில் அடிக்கடி உலா வருவது வழக்கம்.
எங்கும் எதிலும் லஞ்சம் என அரசு ஊழியர்கள் லஞ்சத்திலேயே ஊறிக் கிடப்பதாக பொதுமக்கள் மத்தியில் ஒரு தவறான அபிப்பிராயம் உண்டு. சிலர் செய்யும் தவறுகளால் மொத்த துறைக்குமே அவப்பெயர் ஏற்படுவது உண்மைதான்.

காவல்நிலையங்களில் லஞ்சம்
காவல்நிலையங்களில் லஞ்சம் கொடுக்காமல் எந்த விஷயத்தையும் முடிக்க முடியாது என்ற பேச்சும் அண்மைக் காலங்களில் அதிகமாக அடிபடுவதை கேட்க முடிகிறது. காவல் துறையில் மனிதாபிமானம் மற்றும் நேர்மையுடன் நடந்து கொள்ளும் காவலர்களும் உள்ளனர் என்பதை நிரூபிக்கும் வகையில் மதுரையில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. மதுரை பூக்கடை காவல் நிலையத்தில் ஆய்வாளர் வைத்துள்ள விளம்பரப்பலகை பொதுமக்கள் மத்தியிலும் சமூக வலைதளவாசிகள் மத்தியிலும் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

காவல்நிலையத்தில் விளம்பரபலகை
மதுரை மாநகர் சைபர் கிரைம் பிரிவில் பணியாற்றிய சரவணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒத்தக்கடை காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு கடந்த 25ஆம் தேதி காவல் ஆய்வாளராக பொறுப்பேற்றார். இதையடுத்து அவர் காவல் நிலையத்தில் வைத்துள்ள விளம்பர பலகை தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆனதோடு பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் தான் யாரிடமும் லஞ்சம் வாங்குவதில்லை தன்னுடைய பெயரைச் சொல்லி யாருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டாம் என காவல் நிலைய வாசலில் ஆய்வாளர் வைத்துள்ள விளம்பரப் பலகை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது குறிப்பாக அந்த காவல் நிலையத்திற்கு வரும் மக்கள் இந்த அறிவிப்பை கண்டு அசந்து போயுள்ளனர்..

லஞ்சம் வாங்க மாட்டேன்
காவல் நிலைய வாசலில் வைக்கப்பட்டுள்ள அந்த விளம்பரப் பலகையில், ஒத்தக்கடை காவல் நிலைய பொறுப்பதிகாரி காவல்துறை ஆய்வாளராக பொறுப்பேற்றுள்ள சரவணன் ஆகிய நான் யாரிடமும் லஞ்சம் கையூட்டு பெறுவதில்லை, என் பெயரைச் சொல்லிக் கொண்டு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை சுமுகமாக முடித்து தருவதாக கூறி யாரிடமும் எந்தவித பொருளோ பணமோ கையூட்டு கொடுக்க வேண்டாம் என்றும், கொடுக்கும் பட்சத்தில் அதற்கு நான் எந்த விதத்திலும் பொறுப்பில்லை என தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிக்கு சரவணன் காவல் ஆய்வாளர் ஒத்தக்கடை காவல் நிலையம் மதுரை மாவட்டம் என அந்த போர்டு வைக்கப்பட்டு உள்ளது. மேலும் காவல்துறை உங்கள் நண்பன் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காவல் ஆய்வாளருக்கு பாராட்டு
தமிழகத்தில் காவல்துறை மீதான அதிகளவு குற்றச்சாட்டுகளும் புகார்களும் அதிகரித்தாலும் ஒருபுறம் காவல்துறையினர் மனிதாபிமான செயல்களும் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற தவறுவதில்லை அந்த வகையில் சென்னையில் வெள்ளத்தில் மயங்கி இளைஞனைத் தன் தோள்மீது தூக்கி சென்று காப்பாற்றிய பெண் காவல் ஆய்வாளருக்கு பாராட்டுகள் குவிந்து முதலமைச்சரும் பாராட்டினார் இந்த நிலையில் மதுரையில் லஞ்சம் பெறுவது இல்லை என விளம்பரப் பலகை வைத்துள்ள சரவணனுக்கும் சமூக வலைத்தளங்களிலும் அப்பகுதி பொது மக்களும் இளைஞர்களும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர் அதே நேரத்தில் இதேபோல தமிழகத்தின் அனைத்து காவல் நிலையங்களிலும் இதேபோல விளம்பரப் பலகை வைத்தால் காவல் துறை மீதான நம்பிக்கை அதிகரிக்கும் என்பதே அனைவரின் கருத்து












Click it and Unblock the Notifications