மசாஜ் செண்டர்களில் கேமரா தனிநபர் உரிமைக்கு எதிரானது – சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து
மதுரை: ஸ்பா, மசாஜ் சென்டர்களில் சிசிடிவி கேமரா பொருத்துவது தனிநபர் உரிமைக்கு எதிரானது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.
திருச்சியைச் சேர்ந்தவர் பயேல் பிஸ்வாஸ். இவர் திருச்சி தில்லை நகர் அண்ணா நகரில் குயின் ஆயுர்வேதிக் கிராஸ் ஸ்பா சென்டர் என்ற பெயரில் ஸ்பா நடத்த தடையில்லாச் சான்றிதழ் வழங்க போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்துள்ள உத்தரவில், ஸ்பா தொழிலை முறைப்படுத்தச் சட்டம் இல்லாமல் இருந்தது எனவும், ஸ்பா தொழிலுக்கு அரசிடம் இருந்து உரிமம் பெற வேண்டியதில்லை எனவும், 2018-ல் ஸ்பா தொழில் நடத்தக் கட்டாயம் உரிமம் பெற வேண்டும் என அரசு உத்தரவிட்டதன்படி மனுதாரர் உரிமம் மற்றும் தடையில்லாச் சான்றிதழ் கேட்டு நீதிமன்றம் வந்துள்ளாக குறிப்பிட்டார்.
தொடர்ந்து அரசு வழக்கறிஞர் வழக்கு குறித்து பேசும்போது, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்பா தொடர்பான வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஸ்பா, மசாஜ் மற்றும் தெரபி சென்டர்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும், அந்த கேமராக்கள் இயங்கும் நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தவும் டிஜிபிக்கு உத்தரவிட்டிருப்பதாக கூறினார்.
ஸ்பா, மசாஜ் சென்டர் போன்ற இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது தனிநபர் உரிமையைப் பறிக்கும் செயலாகும் என்றும், மேலும் இது தனியுரிமை தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரானதாக உள்ளது எனக் கூறிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ; ஸ்பா சென்டர்களில் ஆட்கள் நுழையும், வெளியேறும் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தலாம் எனவும், இந்த விவகாரத்தில் தனிநபர் உரிமை பாதிக்கப்படாத வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.மேலும் இந்த வழக்கைப் பொறுத்தவரை மனுதாரரின் மனுவை போலீஸார் 4 வாரங்களில் பரிசீலித்து தடையில்லாச் சான்று வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications