நீட் முறைகேடு..ஏழை விவசாயிகளிடம் மட்டும் தான் ஆதார் கேட்பீங்களா? மத்திய அரசை விளாசிய நீதிபதி..!
மதுரை: கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில், தேசிய தேர்வு முகமை ஆதார் விவரங்களை ஏன் வழங்கவில்லை எனவும், ஆதார் என்பது ஏழை விவசாயிகளிடம் மட்டும் தான் கேட்பீர்களா? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்ட சென்னையைச் சேர்ந்த தருண் மோகன், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில் மருத்துவக் கல்விக்கான நீட் நுழைவு தேர்வில் மாணவன் ஒருவனுக்கு ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுத புரோக்கராக செயல்பட்டதாக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. எனவே இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. கடந்த முறை விசாரணைக்கு வந்த போது சிபிசிஐடி இந்த வழக்கை சிறப்பு குழு அமைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, அது நிறைவேற்றப்பட்டதா என நீதிபதி கேள்வி எழுப்பினார். சிபிசிஐடி தரப்பில் அதற்கான பணிகள் நடைபெற்று கொண்டு இருக்கிறது என தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டு கோபம் அடைந்த நீதிபதி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின்பும் ஏன் சிறப்பு குழு அமைக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.
மேலும் 2019 ஆம் ஆண்டு வழக்கில் ஐந்து ஆண்டுகளாக விசாரணைகள் தொய்வு ஏற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சிபிசிஐடி விசாரணை சரியாக நடத்தவில்லை என்பதை இதிலிருந்து தெரிகிறது. எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என நீதிபதி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நீதிபதி புகழேந்தி தேசிய தேர்வு முகமை தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் சிபிசிஐடி கேட்ட ஆவணங்கள் வழங்கப்பட்டு விட்டதா என கேள்வி எழுப்பினார்.
அவர்கள் கேட்ட ஆவணங்கள் வழங்கப்பட்டு விட்டது என தெரிவித்தார். ஒரு மாணவருக்காக மூன்று பேர் தேர்வு எழுதியுள்ளனர். அவர்களுடைய ஆதார் விவரங்கள் வழங்கப்பட்டதா என நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்பொழுது ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆதார் அவசியமில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது என தெரிவித்தார். இதைக் கேட்டு கோபம் அடைந்த நீதிபதி ஏழை விவசாயிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்க ஆதார் அவசியம். ஆனால் மருத்துவக் கல்விக்கு தேர்வு எழுத வந்தவர்களுக்கு ஆதார் அவசியமில்லை இதுதான் உங்களுடைய கொள்கை முடிவா?
விவசாயிகளுக்கு மட்டும் தான் ஆதார் அவசியம் என்று உச்ச நீதிமன்றம் உங்களிடம் தெரிவித்துள்ளதா என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதி, தேர்வு எழுத வரும் மாணவர்களை அனைத்தும் சோதனை செய்யும் நீங்கள் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுத வருபவர்களை சோதனை செய்வதற்கான போதிய தொழில்நுட்பங்கள் தேசிய தேர்வு முகமையிடம் இல்லையா எனவும் கேள்வி எழுப்பினார். சிபிசிஐடி போலீசாரின் திறமையற்ற விசாரணையை தேசிய தேர்வு முகமை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு உள்ளது எனக் குறிப்பிட்ட நீதிபதி, வழக்கு நிலை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணை அறிக்கை திருப்தி அளிக்காவிட்டால் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications