போலீஸுக்கு தெரியாமல் அக்யூஸ்ட் தலைமறைவாக மாட்டாங்க! குட்டு வைத்த உயர்நீதிமன்றம்! பரபர உத்தரவு..!
மதுரை : பல்வேறு குற்ற வழக்கில் ஈடுபட்டவர்கள் முன்ஜாமீன் கோரிய வழக்கில் கருத்து தெரிவித்துள்ள நீதிபதி , முன்ஜாமீன் கோரிய மனுதாரர்களை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலையிட்டு கைது செய்ய வேண்டும் எனவும், காவல்துறையின் அனுமதி இன்றி குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாட முடியாது என கூறியுள்ளார்.
அடிதடி வழக்கு , சீட்டு மோசடி , குட்கா பொருள் விற்பனை, மணல் திருட்டு , மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியபட்டுள்ளவர்கள் முன் ஜாமீன் கோரி கீழமை நீதிமன்றங்களில் மனு செய்திருந்தனர். அங்கு முன் ஜாமீன் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனையடுத்து, மதுரை, திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை , ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட பலர் தங்களுக்கு முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்திருந்தனர்.

முன் ஜாமீன் கோரி மனு
அப்போது மனு தாக்கல் செய்தவர்கள் முன் ஜாமின் மனுக்களில் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்பதாகவும் தெரிவித்திருந்தனர். இந்த மனு நீதிபதி பி. வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதி," வழக்குப்பதிவு செய்து நீண்ட நாட்கள் ஆகியும் போலீசார் ஏன் இதுவரையில் யாரையும் கைது செய்யவில்லை. கைது செய்யாத காரணத்தினால் தான் அவர்கள் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யும் நிலை ஏற்படுகிறது.

நீதிபதி கேள்வி
இந்த மனுக்கள் தாக்கல் செய்யும் வரை ஏன் கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பினார். பின்னர், சம்பந்தப்பட்ட மனுதாரர்களை உடனடியாக கைது செய்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி
அதன் அறிக்கையை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்தார். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அனைத்து வழக்குகளிலும் முன்ஜாமீன் கோரிய நபர்கள் தற்போது தலைமறைவாகி விட்டனர் என போலீசார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

போலீஸ் கூறுவது ஆச்சர்யம்
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதி குற்ற செயல்களில் ஈடுபட்டு வழக்கறிஞர்கள் மூலம் மனு தாக்கல் செய்கின்றனர். அதுவரை காவல்துறையினர் கைது செய்யவில்லை. தற்போது நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பு குற்றவாளிகள் தலைமறைவாகி விட்டதாக போலீசார் கூறுவது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகின்றது.

அதிரடி உத்தரவு
குற்றவாளிகள் காவல்துறையின் ஒத்துழைப்போடு தான் தலைமறைவாகினர் காவல் துறைக்கு தெரியாமல் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது. எனவே காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவல் திருப்தி அளிக்கவில்லை. குற்றவாளிகள் காவல்துறைக்கு தெரியாமல் சுதந்திரமாக நடமாட முடியாது. எனவே சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேரடியாக தலையிட்டு கைது செய்து உரிய நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications