இன்ஸ்டாகிராம் காதலனுடன் எஸ்கேப்! கோயம்பேட்டில் வளைத்த ‘காக்கி பேண்ட்’! நடு காட்டுக்குள் அலறல் சத்தம்
மதுரை : இன்ஸ்டாகிராமில் பழகிய இளைஞருடன் காதல் வயப்பட்டு சென்னைக்கு ஓடிய மதுரையைச் சேர்ந்த பள்ளி மாணவியை காவல்துறை அதிகாரி என மிரட்டி லாரி டிரைவர் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த 15 வயதான மாணவி ஒருவர் அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 5-ம் தேதி பள்ளி செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை.
இலங்கை நெருக்கடி.. முதல்வர் ஸ்டாலினிடம் ரூ 5 லட்சம் நிவாரணம் வழங்கிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக்!
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பல இடங்களிலும் தேடியும் மகளை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் சம்பவம் குறித்து திருமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இன்ஸ்டாகிராம் காதல்
புகாரின் அடிப்படையில் போலீசார் மாணவியை தேடிவந்த நிலையில், அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த மாணவி அடிக்கடி இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வந்துள்ளார். தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டுள்ளார். அதற்கு அதிகமான லைக்குகள் கிடைத்துள்ளன.
அப்போது, சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த ஜீவானந்தம் என்ற இளைஞர் அந்த மாணவிக்கு பழக்கம் ஆகியுள்ளார். இருவரும் இன்ஸ்டாகிராம் மூலமாகவே பழகி வந்த நிலையில், இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது
வீட்டிலிருந்து ஓட்டம்
இருவரும் நேரில் சந்தித்து பேச ஆசைப்பட்ட நிலையில், ஜீவானந்தத்தை மாணவி மதுரைக்கு அழைத்துள்ளார். பின்னர் மாணவி பள்ளி செல்வதாக கூறிவிட்டு ஜீவானந்தத்தை பார்க்க சென்றுள்ளார். இருவரும் மதுரையில் இருந்து புறப்பட்டு திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு சென்று அங்குள்ள தனியார் விடுதியில் தங்கி உல்லாசமாக இருந்துள்ளனர். இதையடுத்து, அங்கிருந்து கோவைக்கு சென்று அங்கும் விடுதி எடுத்து தங்கியுள்ளனர். பின்னர் இருவரும் கடந்த 10-ம் தேதி கோவையில் இருந்து சென்னைக்கு திரும்பி திரைப்படம் ஒன்று பார்த்து விட்டு நள்ளிரவு 12 மணிக்கு இருவரும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தனியாக அமர்ந்து பேசி கொண்டிருந்தனர்.
பாலியல் வன்கொடுமை
அந்த நேரத்தில் காக்கி கலர் பேண்ட் மற்றும் வெள்ளை சட்டை அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் தான் போலீஸ் என்றும் நீங்கள் யார் என்றும் விசாரித்துள்ளார். மேலும் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்வதாக கூறி அழைத்து சென்றுள்ளார். பின்னர் ஜீவாவை பாதி வழியில் இறக்கி விட்டு மாணவியை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதோடு, மீண்டும் இருவரையும் அழைத்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் விட்டு சென்றுள்ளார். பின்னர் அவர்கள் இருவரும் சேலத்தில் உள்ள ஜீவானந்தத்தின் வீட்டிற்கு சென்று நடந்த சம்பவத்தை கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
லாரி ஓட்டுனர் கைது
இதைகேட்டு அதிர்ச்சியடைந்த ஜீவானந்தத்தின் தாய், அவர்கள் இருவரையும் அழைத்து கொண்டு காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இது தொடர்பாக புகாரின் பேரில் திருமங்கலம் நகர் போலீசார் சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த ஆண்டனி அலெக்ஸ் என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி தற்போதே அவர்களின் நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க வேண்டுமென காவல்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.