மதுரை அரசு மருத்துவமனையில் 8 ரெம்டெசிவிர் மருந்து பெட்டிகள் திருட்டு - போலீஸ் விசாரணை
மதுரை கொரோனா சிறப்பு மருத்துவமனையில் வைக்கப்பட்டிந்த 8 ரெம்டெசிவிர் மருந்து பெட்டிகள் திருடப்பட்டுள்ளது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் வைக்கப்பட்டிருந்த 8 ரெம்டெசிவிர் மருந்து பெட்டிகள் திருடப்பட்டுள்ளன. மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் ஊழியர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கொரோனா இரண்டாம் அலை காரணமாக பாதிப்பு அதிகரித்து வருவதால், ரெம்டெசிவிர் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், சென்னை கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட மருத்துவமனைகளில் மக்கள் நீண்ட வரிசையில், பல மணி நேரம் காத்திருந்து வாங்கிச் செல்கின்றனர்.
இதற்கிடையில், கள்ளச்சந்தையில் மருந்துகள் 15,000 முதல் 30,000 வரை விற்பனை செய்யப்படுகின்றது. தமிழக அரசு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் மருந்துகளின் உரிய விலைக்கு விற்பனை செய்து வருகிறது. கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்துகளை விற்பனை செய்பவர்களை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர்.
தென்மாவட்டத்தை சேர்ந்த கொரோனா நோயாளிகளுக்கு பிரத்தியேகமாக சிகிச்சை அளிக்கும் மையமாக மதுரை கொரோனா சிறப்பு மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. இந்த சிறப்பு மருத்துவமனையில் நேற்றிரவு ரெம்டெசிவிர் மருந்து பெட்டிகள் திருட்டப்பட்டது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலாகுமா? - சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை
ரெம்டெசிவிர் மருந்து பெட்டிகள் திருடப்பட்டது குறித்து மருத்துவமனை தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, மருந்து சேமிப்பு கிடங்கு ஊழியர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நாடு முழுவதும் ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனை வளாகத்திலேயே ரெம்டெசிவிர் மருந்து திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.