பாஜகவிற்கு மேல் ஒரு தலைமை.. மோடிக்கு எதிராக செல்லூர் ராஜூ சொன்ன பெரிய மேட்டர்
மதுரை: பாஜகவிற்கு மேலாக ஒரு தலைமை உள்ளது, அவர்கள் மோடி பிரதமர் வேட்பாளர் என இன்னும் கூறவில்லை என்று கூறிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, பாஜக விதிகளின்படி இரண்டு முறைக்கு மேல் பிரதமராக ஒருவரே பதவி வகிக்க முடியாது என்றும் எனவே தேர்தலுக்குப் பின்னரே யார் பிரதமர் என்பதை முடிவு செய்வார்கள் என்றும் கூறினார்.
இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஏராளமான மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வரிசையில் நின்று மக்கள் வாக்களித்தனர். இந்த தேர்தல் திமுக தலைமையில் ஒரு அணியும், அதிமுக தலைமையில் ஒரு அணியும், பாஜக தலைமையில் ஒரு அணியும், நாதக தனியாகவும் போட்டியிடுகின்றன..

இவர்களில் எந்த கட்சி அல்லது கூட்டணி அதிக இடங்களை வெல்லும் என்பது ஜூன் 4ம் தேதிதான் தெரியவரும்.
இந்நிலையில் மதுரையில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். மதுரை மீனாட்சி மகளிர் அரசினர் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிக்கு சென்ற அவர் வாக்களித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் ஓ பன்னீர்செல்வம் முதல் மோடி வரை செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள்.
செய்தியாளர் ஒருவர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம், தேர்தலுக்கு பின்னர் அதிமுக தங்களிடம் வந்து விடும் என முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளாரே? என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த செல்லூர் ராஜூ "பலாப்பழத்தை தேடி ஈக்கள் வேண்டுமானால் வரும், ஒரு அதிமுக தொண்டன் கூட வரமாட்டான்" என்று கூறினார்.
அடுத்ததாக இன்னொரு செய்தியாளர் தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்து போட்டியிடும் பாஜக நாடு முழுவதும் 400 சீட்களை வெல்லுமா? என்று செல்லூர் ராஜூவிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, "ஹா ஹா ஹா... ஆண்டவனுக்குதான் வெளிச்சம். தமிழக மக்கள் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளார்கள். தமிழர்களின் உரிமையை மீட்பதும் பலத்தை காப்பாற்றுவதும் அதிமுகவின் கொள்கை என்று உறுதி தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் கூட யார் பிரதமர் வேட்பாளர் என கூறவில்லை. பாஜக கூட்டணியில்தான் மோடி பிரதமர் வேட்பாளர் என கூறுகிறார்கள். பாஜகவிற்கு மேலாக ஒரு தலைமை இருக்கிறார்கள், அவர்கள் நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளர் என இன்னும் கூறவில்லை. பாஜக விதிகளின்படி இரண்டு முறைக்கு மேல் பிரதமராக ஒருவரே பதவி வகிக்க முடியாது எனக் கூறுவார்கள். எனவே தேர்தலுக்குப் பின்னரே யார் பிரதமர் என தெரியவரும்.மக்கள்தான் எஜமானர்கள் ஆவார்கள்.
மக்கள் முடிவு செய்பவர்கள்தான் பிரதமராக வர முடியும். தமிழகத்திற்கு யார் நன்மை செய்வார்கள் என பார்த்து அவர்களுக்குதான் எங்களுடைய ஆதரவை தேர்தல் முடிவுக்கு பின்னர் நாங்கள் (அதிமுக) தருவோம். தமிழ்நாடு என்பது திராவிட பூமி. ஆகவே திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணிக்கு இடையே மட்டுமே போட்டி நிலவுகிறது" இவ்வாறு செல்லூர் ராஜூ கூறினார். அதேநேரம் மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்று பாஜக பிரச்சாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications