அரை மணி நேரம் தொழுகையால் எந்த பாதிப்பும் வராது.. திருப்பரங்குன்றம் மலை தொழுகைக்கு ஹைகோர்ட் ஒப்புதல்
மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் நெல்லி தோப்பு பகுதியில் முஸ்லீம்கள் செல்ல தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என்ற தொடரப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள், அரை மணி நேரம் தொழுகை நடத்துவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது எனக்கூறி தொழுகை நடத்த தடை விதிக்க மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அதில், திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோயிலும், சிக்கந்தர் பாதுஷா தர்காவும் இருக்கிறது. மலைக்கு செல்லும் பாதையில் நெல்லித்தோப்பு பகுதியில் ரம்ஜான் மாதங்களில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி வருகிறார்கள்.

இதன் காரணமாக காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே திருப்பரங்குன்றம் மலையில் நெல்லி தோப்பு பகுதியில் முஸ்லீம்கள் செல்ல தடை விதிக்க உத்தரவிட வேண்டும்" என்று கோரப்பட்டு இருந்தது. இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியாகவுரி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் நெல்லி தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.
அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், மலைக்கு மேல்தான் தர்காவும் அமைந்துள்ளது. அரை மணி நேரம் தொழுகை நடத்துவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. எனவே இந்த சமயத்தில் தொழுகைக்கு தடை விதிக்க முடியாது எனக்கூறி மனு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவிட்டனர். மேலும் மனு மீதான விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications