ஜெயிச்ச மறுநிமிஷம் எடப்பாடியை மறந்துட்டு பாஜகவுக்கு தாவிட்டாங்க! செல்லூர் ராஜூ யாரை சொல்றார் பாருங்க
மதுரை: ஜெயிச்ச மறுநிமிஷம் அந்த வெற்றிக்கு காரணமாக இருந்த எடப்பாடி, அதிமுகவை மறந்துவிட்டு உடனே ஆளுங்கட்சி பாஜகவோடு பாமக கூட்டணி வைத்துவிட்டார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். மேலும் அதிமுக - பாஜக கூட்டணி குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கும் செல்லூர் ராஜூ பதில் அளித்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்குமா என்றும், தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் ஒதுக்குமா என்பது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு செல்லூர் ராஜூ அளித்த பதிலை இங்கு பார்க்கலாம்.

உடனே ஆளுங்கட்சிக்கு தாவிட்டாங்க
செல்லூர் ராஜா கூறியதாவது:- எங்க பொதுச்செயலாளர் விளக்கமாக சொல்லிவிட்டார். ராஜ்யசபா சீட் குறித்தும், கூட்டணி குறித்தும் அவரே எல்லாவற்றையும் தெளிவாக சொல்லிவிட்டார். 6 மாதம் பொறுத்துக்கோங்க.. 6 மாதம் கழிச்சு சொல்கிறோம் என்று கூறிவிட்டார். ராஜ்யசபா சீட்டை பொறுத்தவரை, எங்க பொதுச்செயலாளர் ஏற்கனவே பேசியிருப்பார். எடப்பாடியை பொறுத்தவரை, ஜெயலலிதா எப்படியோ, எம்ஜிஆர் எப்படியோ.. அதேபோல தான்.
யாருக்கு என்ன வாக்குறுதி கொடுத்தாரோ அதை அப்படியே நிறைவேற்றுவார். அதற்கு எடுத்துக்காட்டு தான். பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி. அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார் என்றால் அதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமி தான். ஆனால் ஜெயிச்ச மறுநிமிஷம், அந்த கட்சி வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்த அதிமுக, எடப்பாடியை மறந்துவிட்டு உடனே ஆளுங் கட்சிக்கு தாவிவிட்டார்கள்.
எங்களுடைய ஒரே எதிரி திமுக தான்
இருந்தாலும் எங்க தலைவர், கொடுத்தது கொடுத்தது தான். வாக்குறுதி கொடுத்துவிட்டோம். எனவே அதை பற்றியெல்லாம் கவலைப்பட தேவையில்லை என்று கூறிவிட்டார். எங்க தோழமை கட்சிகளை எப்படி அரவணைத்து செல்ல வேண்டும் என்பது எடப்பாடிக்கு தெரியும். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி சிறப்பாக கட்சியை வழிநடத்தி செல்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது பாஜகவுடன் கூட்டணி வைக்கப்படுமா என்றும் இதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறதா என்றும் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த செல்லூர் ராஜூ, "ஏங்க.. ஏன்... இப்படி இருக்குமோ.. அப்படி இருக்குமோ என்று ஏன் கற்பனை பண்ணுறீங்க.. எடப்பாடி என்ன சொல்லியிருக்கிறார்.. எங்களுடைய ஒரே எதிரி திமுக. திமுக என்ற தீய சக்தியை அழித்து ஒழிக்கும் வரை அதிமுக ஓயாது.. ஓயாது. இது தான் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் நோக்கம். இப்போதும் அதே வழியில் தான் எடப்பாடியும்.
எடப்பாடி பழனிசாமி முதல்வராகனும்
இன்னைக்கு இருக்கிறதை என்னவென்று பாருங்கள். நாளைக்கு நடப்பதை பற்றி இப்போவே, ஏன்.. நாளைக்கு இறந்துவிடுவோம் என்பதற்காக இப்போதே போய் சுடுகாட்டில் படுத்துவிடுவீங்களா.. ஏங்க இப்படி.. கூட்டணியா இல்லையா என்பதை அந்த நேரத்தில் எடப்பாடி சொல்வார். எங்களுடைய கட்சி ஆட்சி அமைக்கனும், எடப்பாடி முதல்வராகனும்.. இதற்கு யார் துணை வருவார்களோ அவர்களுடன் கூட்டணி வைப்போம் என்று ஏற்கனவே சொல்லிவிட்டார். அப்புறம் போய் என்கிட்ட போய் பேச்சுவார்த்தை நடக்கிறதா என்று தனியாக கேட்டால், எனக்கு என்ன பொதுச்செயலாளரை விட சூப்பர் பவர் இருக்கிறதா என்ன.." என்றார்.
அப்போது பாஜகவுடன் கூட்டணி இனி கிடையாது என்று எடப்பாடி சொல்லியது பற்றி கேட்ட கேள்விக்கு பதில் அளித்த செல்லூர் ராஜூ, "இதனை ஜெயலலிதாவும் சொல்லி இருக்கிறார். எடப்பாடியும் சொல்லியிருக்கிறார். இது எல்லாம் தெரியாமல் சொல்வாராங்க.. அதெல்லாம் விவரமானவர் தான். ரொம்ப ரொம்ப விவரமானவர்" என்று பதில் கூறினார்.
அதிமுக பாஜக கூட்டணி?
முன்னதாக நேற்று முன் தினம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2026 சட்டமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அமையும் என்றும், பாஜகவுடன் கூட்டணியா இல்லையா என்பது அந்த நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றும் கூறினார். இதேபோல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் இப்போது எதையும் சொல்ல முடியாது. இன்னும் நேரம் இருக்கிறது என்று கூறியிருந்தனர். அதே நேரத்தில் தமிழகத்தில் புதிதாக கட்சி துவங்கியுள்ள நடிகர் விஜய்யின் தவெகவும் 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்று கூறியுள்ளது.
இதனால் அதிமுக பாஜக கூட்டணி அமைய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு ஏற்றார்போலவே எடப்பாடியும், அண்ணாமலையும் கூறியிருப்பதாக திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தெரிவித்து வருகிறார்கள். கூட்டணி கண்டிப்பாக கிடையாது என்று பதில் சொல்லாமல் இப்போது சொல்ல முடியாது என்று பதில் தெரிவித்து இருப்பதே இதற்கு சாட்சி என்றும் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications