திருநீரை அழித்த திருமாவளவன்.. திருப்பரங்குன்றம் கோவிலில் தம்பதி ‛செல்பி' கேட்டபோது என்ன நடந்தது?
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவரிடம் தம்பதி ‛செல்பி' கேட்டனர். இதையடுத்து திருமாவளவன் அவர்களின் செல்போனை வாங்கி அதில் உள்ள கேமராவை பார்த்து தனது நெற்றியில் பூசப்பட்டு இருந்த திருநீரை அழித்தார். அதன்பிறகு அவர் தம்பதியுடன் செல்பி எடுத்தார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இன்று மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோவிலில் தரிசனம் செய்தார். அதேபோல் சிக்கந்தர் அவுலியா பாதுஷா பள்ளி வாசலில் திருமாவளவன் வழிபாடு செய்தார்.

முன்னதாக திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சென்ற திருமாவளவனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பரிவட்டம் கட்டி மாலை அணிவித்து அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. முருகனை தரிசனம் செய்தபோது திருமாவளவன் நெற்றியில் திருநீர் பூசப்பட்டது.
அதன்பிறகு நெற்றியில் திருநீருடன் திருமாவளவன் கோவிலில் இருந்து வெளியே நடந்து வந்து கொண்டிருந்தார். இந்த சமயத்தில் கோவில் வளாகத்தில் ஒரு தம்பதி, திருமாவளவனை பார்த்து ‛செல்பி' எடுக்க விரும்பினர். இதுபற்றி அவர்கள் திருமாவளவனிடம் கூறினர். இதையடுத்து அவர்களின் செல்போனை வாங்கிய திருமாவளவன் கேமராவில் தனது முகத்தை பார்த்தார். நெற்றியில் இருந்த திருநீரை கையால் அழித்தார். அதன்பிறகு அவர் தம்பதியுடன் சேர்ந்து ‛செல்பி' எடுத்துவிட்டு செல்போனை அவர்களிடம் வழங்கிவிட்டு அங்கிருந்து சென்றார்.
நெற்றியில் இருந்த திருநீரை திருமாவளவன் அழித்ததை அங்கிருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையதள்களில் வெளியாகி வேகமாக பரவி சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்து அமைப்பினர், முருகன் பக்தர்கள், பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் திருமாவளவன் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கி உள்ளனர்.
திருமாவளவனின் இந்த செயலுக்கு மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், போலி கபடதாரிகளின் வேஷம் அம்பலமானது..! மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வழிபாடு நடத்த சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் நெற்றியில் பூசிய விபூதியை கோவில் வளாகத்திற்குள்ளேயே அழிக்கும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி வைரலாகிக் கொண்டிருக்கின்றது.
தொண்டர் ஒருவர் செல்பி எடுப்பதற்காக விபூதியை அழித்ததாக விளக்கம் சொல்கின்றனர். முருகப்பெருமானின் அருட் பிரசாதமான விபூதி, இவர்களுக்கு அழகை குறைக்கும் பொருளாகத் தெரிகிறது. இதுபோன்ற போலி கபடதாரிகளிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?. திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று கூறி அபகரிக்கும் கும்பலுக்கு எதிராக இந்துக்கள் போராடி வருகின்றனர். ஆனால் இவர்களோ, திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்கின்றனர்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுகவினரும் அவர்களின் கூட்டணி கட்சியான விசிக-வும் செய்து வருவது மோசடி அரசியல். இந்துக்களின் எழுச்சியைப் பார்த்து பயந்து போன இவர்கள், தற்போது இந்து மத நம்பிக்கையில் ஆர்வமுள்ளவர்களாக காட்டிக்கொள்ள முயல்கின்றனர். இந்த கபட நாடகத்திற்காகத் தான் திருமாவளவன் திருப்பரங்குன்றம் சென்றுள்ளார்.
அரிதாரம் பூசி நடிப்பதைப் போன்று கோவிலுக்கு சென்று விபூதி பூசிக் கொண்டு, அதை கோவில் வளகாத்திலேயே அழித்துள்ளார். இவர்களுக்கு தமிழக மக்கள் மட்டுமல்லாமல் அருள்மிகு சுப்ரமணிய சுவாமியும் பாடம் புகட்டுவார். வெற்றிவேல்..! வீரவேல்..!'' என் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications