திருப்பரங்குன்றம் தர்காவுக்கு.. மலையேறி போன 4 பேர்! திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர்
மதுரை: திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பாக சலசலப்பு நிலவி வரும் நிலையில், மலை மீது உள்ள தர்காவில் சந்தனக்கூடு நடத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. எனவே தர்காவில் உள்ள கொடிமரத்தை புதுப்பிக்க 4 பேர் மலை ஏறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து அமைப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
திருப்பரங்குன்றம் மலை மீது உச்சிப்பிள்ளையார் கோயில் இருக்கிறது. இங்குள்ள தீப மண்டபத்தில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபம் ஏற்றுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் தீபம் ஏற்ற ஏற்பாடுகள் நடந்தன.

ஆனால், இங்கு மட்டும் தீபம் ஏற்றினால் போதாது, சிக்கந்தர் தர்காவிலிருந்து 15 மீ தள்ளியிருக்கும் கல் தூணிலும் தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்து அமைப்புகள் வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தன. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இந்து அமைப்புகள் கோரும் கல் தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கி உத்தரவிட்டிருந்தார்.
கார்த்திகை தீப நாள் நெருங்கியது. விடிந்தால் கார்த்திகை தீபம். ஆனால், நாங்கள் கோரிய தூணில் தீபம் ஏற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று இந்து அமைப்புகள் மீண்டும் நீதிமன்றத்தை நாடின. இதனையடுத்து நீதிமன்றத்தின் பாதுகாப்புக்காக நின்றிருந்த மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்களை அழைத்துக்கொண்டு சென்று, தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இதற்கிடையில் திருப்பரங்குன்றம் மலைக்கு கீழே குவிந்திருந்த இந்து அமைப்புகள், திடீரென போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். பாதுகாப்புக்காக இருந்த போலீசார் மீதும் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதேபோல தீபம் ஏற்ற தொழிற் பாதுகாப்பு படையினருடன் வந்த ராம ரவிக்குமார் உள்ளிட்டோருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. மறுபுறம் கார்த்திகை தீபம் நாளில், திட்டமிட்டபடி ஆண்டாண்டு காலமாக தீபம் ஏற்றப்பட்டு வந்த தீப மண்படத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
இப்படியான சலசலப்பு நடந்திருக்கும் நிலையில்தான், தற்போது மலை மீது இருக்கும் தர்காவில் சந்தனக்கூடு நடத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த தர்காவில் சந்தனக்கூடு விழா நடப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் விழா நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. நாளை மலை மேல் ஏற்றப்படும் மரத்திலான கொடியேற்றத்திற்கான ஊர்வலம் நடக்க இருக்கிறது. இதற்கான அமைதி கூட்டம் நேற்று மதுரை திருமங்கலம் ஆர்டிஓ தலைமையில் நடந்தது. கூட்டத்தில் சந்தனக்கூடு நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
இப்படி இருக்கையில், தர்காவில் உள்ள கொடிமரத்தை புதுப்பிக்க 4 பேர் மலை ஏறியிருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் சசி பிரியா பேச்சுவார்த்தை நடத்தினார். இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications