மழையால் இரவு திடீரென இடிந்த சுவர்.. சிறுவன் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு.. மதுரையில் சோகம்!
மதுரை: தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அப்படி தான் மதுரையிலும் கோடை மழை பெய்து வந்த நிலையில், அங்குத் திருப்பரங்குன்றம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் மே மாதம் என்றாலே கோடை வெப்பம் உச்சத்தில் இருக்கும். மே மாதம் மழை பெய்வதே ரொம்ப அரிதானதாக இருக்கும். ஆனால், இந்தாண்டு நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. ஏப்ரல் மாதம் வெப்பம் உச்சத்திற்குப் போன நிலையில், மே மாதம் தொடக்கம் முதலே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அக்னி நட்சத்திரத்தின் வெப்பமே பெரியளவில் இல்லை.

மதுரை மழை
மதுரையிலும் கூட அப்படி தான் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. மாலை மற்றும் இரவு நேரங்களில் மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதற்கிடையே மதுரை திருப்பரங்குன்றம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
மூவர் உயிரிழப்பு
வலையன்குளம் கிராமத்தில் வீட்டு வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் வெங்கட்டி என்ற பெண், வீரமணி (10), வீரமணியின் பாட்டி அம்மா பிள்ளை ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. நேற்றிரவு மழை காரணமாக சுவரில் பாதிப்பு ஏற்பட்டு இடிந்து விழுந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவமனை செல்லும்போதே பெண் ஒருவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த வீரமணி உட்பட இருவர் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இருப்பினும், அவர்களும் சிகிச்சை பலனில்லாமல் இன்று காலை அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் சுவர் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மூன்றாக உயர்ந்துள்ளது.
என்ன நடந்தது
நேற்றிரவு மதுரையில் பல்வேறு இடங்களிலும் மழை பெய்து வந்த நிலையில், பல இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் முடக்கப்பட்டு இருந்தது. 7 மணி முதலே பல இடங்களில் மின்சார சப்ளை துண்டிக்கப்பட்டு இருந்தது. இதனால் அவர்கள் குடும்பத்தினருடன் வீட்டின் திண்ணையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது தான் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
சிகிச்சை பலனில்லாமல் உயிரிழப்பு
சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று பேரும் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இருப்பினும், அவர்கள் மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இருப்பினும், இதில் குடும்பத்தில் மற்றவர்கள் யாருக்கும் காயம் இல்லை. சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications