வேற லெவல்! தமிழக அரசின் ‘மாஸ்’ திட்டம் இனி எல்லா ஸ்கூலுக்கும் வரப்போகுது.. கோர்ட்டில் சொன்ன வக்கீல்!
மதுரை: காலை உணவு திட்டத்தை அரசு பள்ளிகள் மட்டுமின்றி அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்துவது பற்றி அரசு ஆய்வு மேற்கொண்டு வருவதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் அமல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு மே 7ஆம் தேதி அறிவித்தார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக 1543 பள்ளிகளில் 1.14 லட்சம் மாணவர்களுக்கு திட்டம் தொடங்கப்பட்டது. அடுத்த கட்டமாக ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள 31,008 பள்ளிகளில் பயிலும் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் 18 லட்சம் மாணவர்களுக்கு இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரிவுபடுத்தினார்.
தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் நாள்தோறும் 18 லட்சம் மாணவர்கள் பள்ளியிலேயே காலை உணவு சாப்பிட்டு பயன் பெற்று வருகின்றனர். இந்த திட்டத்தின்கீழ், காலையில் உப்புமா, ரவா கிச்சடி, ரவா கேசரி, பொங்கல், காய்கறி சாம்பார் உள்ளிட்ட பல்வேறு வகை உணவுகள் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
மாணவர்கள் பசியின்றி படிப்பில் கவனம் செலுத்திடும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த திட்டம் நாட்டுக்கே முன்னோடி திட்டமாக அமைந்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கான இந்த காலை உணவுத் திட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கடலோரத்தில் இருக்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தைச் செயல்படுத்தக் கோரி தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிரேசில் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை நடைபெற்ற நிலையில், காலை உணவுத் திட்டத்தை அரசுப் பள்ளிகள் மட்டுமல்லாது அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும் நிதிநிலையைப் பொறுத்து திட்டத்தை விரிவுபடுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று உயர் நீதிமன்ற மதுரை கிளை இந்த வழக்கை முடித்து வைத்தது.












Click it and Unblock the Notifications