“சேலம் இரும்பல்ல.. சிலுவம்பாளையம் செங்கரும்பு!” வளர்மதி வாசித்த கவிதை! அதிமுக மாநாட்டில் கலகல
மதுரை: அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற பின்னர் முதன் முறையாக மாநிலம் தழுவிய மாநாடு இன்று மதுரையில் தொடங்கியுள்ளது. கோலாகலமாக தொடங்கிய இந்த மாநாட்டில் ஒயிலாட்டம், கவிதை அரங்கம், பட்டிமன்றம் ஆகியவை அனல் பறக்க நடந்து வருகிறது. இதில் முன்னாள் அமைச்சர் வளர்மதி வாசித்த கவிதை டிரெண்டாகி வருகிறது.
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற பின்னர் நடைபெறும் முதல் மாநில அளவிலான மாநாடு இது என்பதால் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. ஏற்கெனவே பல கட்ட போராட்டங்களுக்கு பின்னர் கட்சியை ஓபிஎஸ் தரப்பிடமிருந்து முழுமையாக கைப்பற்றியுள்ள நிலையில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் சகிகலா அணியினர் இல்லாமல் இந்த மாநாடு நடைபெறுகிறது.

தென் மண்டலத்தை பொறுத்த அளவில் எடப்பாடி தரப்பை விட ஓபிஎஸ் மற்றும் டிடிவி, சசிகலா தரப்பிற்குதான் அதிக வாக்கு வங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே இதை உடைத்து தென் பகுதியிலும் தனது பலத்தை அதிகரிக்க எடப்பாடி பழனிசாமி, அதிமுக 'பொன்விழா எழுச்சி மாநாட்டை' நடத்துகிறார். மாநாடு நடத்துவதற்கு சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த மாநாட்டில் 3 லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்று சொல்லப்படுகிறது.
அதேபோல கட்சி தொடங்கி 51 ஆண்டுகள் ஆன நிலையில் இதனை சிறப்பிக்கும் வகையில் 51 அடி உயர கொடி கம்பம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதில் எடப்பாடி பழனிசாமி காலை 8.45 மணிக்கு கொடியேற்றி மாநாட்டை தொடக்கி வைத்திருக்கிறார். முன்னதாக அவரை மாநாட்டு அரங்கத்திற்கு வரவேற்க சுமார் 3,000 தொண்டர்கள் கட்சி சீருடையில் அணிவகுப்பை நடத்தினர். எடப்பாடி பழனிசாமி கொடியேற்றும்போது ஹெலிகாப்டரிலிருந்து 10 நிமிடங்களுக்கு சுமார் 1 டன் மலர்கள் தூவப்பட்டது.
25 ஆண்டுகளுக்கு பின்னர் தென் மண்டலத்தில் அதிமுக மாநிலம் தழுவிய மாநாடு நடைபெறுவதால் அரசியல் களத்தில் இந்த மாநாடு பெரும் கவனம் பெற்றுள்ளது. அதேபோல மாநாட்டில் பங்கேற்றுள்ளவர்கள் சோர்வடையாமல் இருக்க பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. ரோபோ சங்கர் உள்ளிட்ட நடிகர்கள் நகைச்சுவை நிகழ்ச்சிகளையும், பிரபல நாட்டுப்புற பாடகரான ராஜலட்சுமி நாட்டுப்புற கச்சேரியையும் நடத்தி இருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து கண் துஞ்சா கழகப் பணியா? மனம் துஞ்சா மக்கள் பணியா? எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றுள்ளது. இதில் கண் துஞ்சா கழகப் பணியா? எனும் தலைப்பில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையிலான அணியும், அதேபோல மனம் துஞ்சா மக்கள் பணியா? எனும் தலைப்பில் அதிமுக நிர்வாகி நடிகை விந்தியா தலைமையிலான அணியும் விவாதத்தில் ஈடுபட்டண.
அதேபோல இதற்கு அடுத்ததாக நடைபெற்ற நாட்டுப்புற கலை நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மூச்சிரைக்க ஒயிலாட்டம் ஆடி அசத்தியுள்ளார். முன்னதாக "எடப்பாடியார் சேலம் இரும்பல்ல.. சிலுவம்பாளையம் செங்கரும்பு" என முன்னாள் அமைச்சர் வளர்மதி அடுக்கு மொழியில் வசனம் பேசி அசத்தியிருந்தார். அவர் மேலும் பேசியதாவது,
"மல்லிகை மணக்கும் மதுரையில்
மண்ணும் தமிழ் மணக்கும்
மண்ணுக்காய் இறைவன் பிரம்படி பட்டதும்
கண்ணகி பெண்ணுக்காய் பாண்டியன் முடி சாய்த்து மண்ணில் வீழ்ந்ததும்
ஞானசம்பந்தர் எழுதியிட்ட ஓலை எதிர் நீச்சல் போட்டதும்
இந்த வைகை நதி வணங்கி வழி நடத்தியதும்
இந்த மதுரை மண்ணின் மகத்துவங்கள்
வேர் எனக்கு பெரியாற்றின் கரை என்றாலும்
விளைந்தது, வாழ்ந்தது எல்லாம் இந்த வைகை ஆற்றின் கரையிலேதான்
பள்ளி பருவம் தொட்டு என்னை திராவிட இயக்க மேடையில் பேச வைத்து
பட்டை தீட்டி பயிற்சி தந்த கழகத்தின் மூத்த முன்னோடிகள்
கழகத்தின் தொண்டர்களின் பாதத்தை நன்றியுடன் வணங்குகிறேன்
அக்டோபர் 10ம் நாள் 1972 புரட்சி தலைவர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்
அன்றைக்கு இதே ஜான்சிராணி பூங்காவில் புரட்சி தலைவருக்கு ஆதரவாக
தாமரை சின்னம் பொறிக்கப்பட்ட கொடியை ரிக்ஷா தொண்டன் வாழவந்தான் இதே மதுரையில்தான் ஏற்றினார்
கண்டன பொதுக்கூட்டமும் நடைபெற்றது
புரட்சித் தலைவர் கட்சி தொடங்கும் முன்னே
அவருக்காக கட்சி தொடங்கிய ஊர் இந்த மதுரை
அதன் பின்னர் தலைவர் இல்லாமலும் தலைவி இல்லாமலும் அநாதையாய் நின்ற நம்மை காத்தவர் அண்ணன் எடப்பாடியார்தான்
சிலுவம்பாளையம்.. கண்ணுக்கு தெரியாத இந்த கிராமங்களின் பெயர்
கண்டங்களை தாண்டி கடல்களை தாண்டி
காற்றின் வேகம் போல ஒளித்துக்கொண்டிருப்பதற்கு காரணம் ஒரே காரணம் அண்ணன் எடப்பாடியார்தான்
உயிர்வாழ பயிற்சியளிக்கும் காவிரி தாயின் காலடியிலே பிறந்த வைரம்
கண் விழிக்கும்போதே காவிரியை பார்த்தவர்
கால் நடக்கும்போதே பச்சை பசுமையில் மனதை பறிகொடுத்தவர்
செங்கரும்பும், செந்நெல்லும் ஏந்திய கரங்களில்தான்
தமிழ்நாட்டு மக்கள் செங்கொலை தந்தார்கள்.. மீண்டும் தரப்போகிறார்கள்
அண்ணன் எடப்பாடியார் ஆயிரம் பறவைகள் இளைப்பாறும் ஆலமரம்
தொட்டி செடியல்ல தோண்டி எறிவதற்கு - அவர்
வெட்ட வெட்ட வளரும் வாழை மரம்
அவர் சிற்றாறு அல்ல.. பேரருவி
அதியமான் அவ்வைக்கு கொடுத்தது நெல்லிக்கனி
அம்மா நமக்கு கொடுத்த தங்கக்கணி அண்ணன் எடப்பாடியார்
அவர் சேலம் இரும்பல்ல.. சிலுவம்பாளையம் செங்கரும்பு
அவர் சாமானியன் அல்ல சாணக்கியன்" என்று கவிதை கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications