மதுரை விரகனூர் டூ மண்டேலா நகர் வரை டிராபிக் ஜாம்! 15 கி.மீ. நீளத்திற்கு நிற்கும் வாகனங்கள்
மதுரை: மதுரையில் அதிமுக மாநாட்டில் கலந்து கொள்ள வாகனங்கள் மண்டேலா நகருக்கு வருகை தருவதால் 15 கி.மீ. தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவருக்கான செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் இன்றைய தினம் மதுரையில் மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டிற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் சாரை சாரையாக வந்திருக்கிறார்கள்.

அது போல் சென்னையில் ரயில் முழுவதும் அதிமுக தொண்டர்கள் நேற்றைய தினம் மதுரைக்கு புறப்பட்டனர். மதுரையில் மண்டலா நகரில் இந்த விழா நடைபெறுகிறது. இதற்காக அதிமுக நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், முன்னாள் எம்பிக்கள், முன்னாள் அமைச்சர்கள் வந்திருக்கிறார்கள்.
தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் வாகனங்களில் தொண்டர்கள் வருகை தந்துள்ளதால் அவர்களது வாகனங்களை நிறுத்த 350 ஏக்கர் பரப்பளவில் இடம் தயார் செய்யப்பட்டது. இங்கு சுமார் 40 ஆயிரம் வாகனங்கள் நிறுத்தலாம். இந்த நிலையில் மதுரையில் மாநாட்டு மேடையில் எடப்பாடி பழனிசாமியின் பேச்சை கேட்க பல இடங்களில் இருந்து தொண்டர்கள் வருகை தருகிறார்கள்.
இதனால் மதுரையில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விரகனூர் முதல் மண்டேலா நகர் வரை 15 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. அதிமுக மாநாட்டு வாகனங்கள் மட்டுமல்லாமல் ஆடி முடிந்தவுடன் இன்று முதல் முகூர்த்த தினம் என்பதால் திருமணத்திற்கு செல்லும் வாகனங்களும் ஸ்தம்பித்து நிற்கின்றன.
சுருக்கமாக சொல்ல போனால் மதுரைக்கு வர முடியாமலும் அங்கிருந்து திரும்ப முடியாமலும் இருக்கின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 1000 முதல் 1500 வாகனங்களில் தொண்டர்கள் வந்துள்ளார்கள். எடப்பாடி பழனிசாமியின் பேச்சை கேட்க காலையில் திருச்சியில் இருந்து புறப்பட்ட வாகனங்கள் இன்னும் மாநாட்டிற்கு வரவில்லை என்று சொல்லும் அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் தொண்டர்களுக்கு 3 வேளை உணவும் தண்ணீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. மாநாட்டு மேடைக்கு எடப்பாடி பழனிசாமி வந்துவிட்டார். அவர் மாநாட்டு மலரை வெளியிட்டார். அவரை வாழ்த்தி முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசினார். அவரைத் தொடர்ந்து மாஜி அமைச்சர் வைகைச் செல்வன் 16 தீர்மானங்களை வாசித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications