வேரோடு சாய்ந்த மரம்.. மரத்தடியில் படித்து கொண்டிருந்த 17 மாணவர்கள் காயம்.. மதுரை அருகே பரபரப்பு
மதுரை: மதுரை அருகே மேலூரில் உள்ள அரசு பள்ளியில் மரத்தடியில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்த மாணவர்கள் மீது மரம் வேரோடு சாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், மாணவ - மாணவிகள் 17 பேர் காயமடைந்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. காலையில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் மதியம் 9ம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரசுப் பள்ளியிலும் அரையாண்டு தேர்வு நடந்து வருகிறது. இதில் இன்று காலை 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதிக்கொண்டிருந்தனர்.

9-ம் மாணவர்களுக்கு மதியம் தான் தேர்வு என்பதால், மரத்தடியில் அமர்ந்து தேர்வுக்கு படித்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஒரு மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதில், மாணவ - மாணவிகள் பலர் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து மரத்திற்குள் சிக்கிய மாணவ மாணவிகளை உடனடியாக மீட்கப்பட்டனர். இதில் மாணவிகள் 12 பேர், மாணவர்கள் 5 பேர் என மொத்தம் 17 பேர் காயம் அடைந்தனர்.
இதையடுத்து காயமடைந்த 17 பேரும் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வருவாய்த்துறை மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மரத்தின் வேரானது உறுதித்தன்மையை இழந்ததால் சாய்ந்து விழுந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் 17 பேர் காயமடைந்த இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications