கூட்டணி குறித்து தினகரனின் கருத்தை ஏற்க முடியாது.. அமைச்சர் உதயகுமார் பேட்டி
Recommended Video
மதுரை: கொள்கையை விட்டு கொடுத்து கூட்டணி அமைத்துள்ளதாக டிடிவி தினகரன் கூறும் விமர்சனத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் முதல் தவணைக்கான 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தினை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் துவங்கி வைத்தார். இந் நிலையில் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரை மாவட்ட விவசாயிகளுக்கான நிதி ஆணையை வழங்கினார்.
மதுரை மாவட்டத்தில் மொத்தம் 91 ஆயிரத்து 128 விவசாயிகள் பயன் பெற உள்ள நிலையில் முதல்கட்டமாக 100 பேருக்கும் நிதி ஆணையை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். பின்னர் அவர் பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது:
திட்டத்துக்கு வரவேற்பு
இந்திய அரசியல் வரலாற்றிலேயே முதன் முதலாக 6 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை தரும் இந்த திட்டம் வரவேற்கதக்க திட்டம். இந்த திட்டம் பற்றி எதிர்க்கட்சிகள் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் விமர்சித்து வருகின்றன.
மக்கள் மறக்கமாட்டார்கள்
அதிமுக கூட்டணியை சந்தர்ப்பவாத கூட்டணி என விமர்சிக்கும் மு.கஸ்டாலின் முன்பு நடந்தவற்றை யோசித்து பார்க்க வேண்டும். பாஜகவுடன் கூட்டணி வைத்து மத்திய அமைச்சரவையில் திமுக பங்கேற்றதை மக்கள் நன்கு அறிவார்கள்.
கூட்டணியை எதிர்பார்க்கவில்லை
சமூக நீதிக்காக துவங்கப்பட்ட பாமகவுடனும் , தமிழக உரிமையை பெற வேண்டும் என்பதற்காக பாஜகவுடனும் கூட்டணி வைத்துள்ளோம். இப்படி ஒரு கூட்டணி அமையும் என்று ஸ்டாலின் உள்பட யாரும் எதிர்பார்க்கவில்லை.
வழக்கமான விமர்சனம்
வழக்கமாக சிறந்த கூட்டணியை எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது வாடிக்கையான ஒன்றுதான். காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு என எந்த உரிமையும், கொள்கையையும் விட்டுக் கொடுக்காமல் அமைக்கப்பட்ட கூட்டணிதான் அதிமுக, பாஜக கூட்டணி.
அதிமுகவின் கொள்கை
அதிமுக எப்பொழுதும் கொள்கையை விட்டுக் கொடுத்தது இல்லை. டிடிவி தினகரன்தான் கொள்கையை விட்டுவிட்டு புதிய கட்சி, புதிய சின்னம், புதிய கொடி என்று தேடிக் கொண்டிருக்கிறார் என்றார்.