விஜய் பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டும்.. அதை செய்யலைனா நிலைக்க முடியாது.. பிரேமலதா அட்வைஸ்!
மதுரை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பத்திரிகையாளர்களை சந்திக்க முன் வர வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் பிரச்சனையை கையில் எடுத்து போராடினால் மட்டுமே அரசியலில் நிலைத்து நிற்க முடியும் என்று கூறியுள்ள அவர், விஜய் எப்போதும் எங்கள் வீட்டுப்பிள்ளை தான் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி நடத்தி வருகிறார். ஏற்கனவே தவெக சார்பாக பிரம்மாண்ட மாநாடு நடத்தப்பட்டது. பின்னர் பரந்தூரில் புதிய விமான நிலையத் திட்டத்தை எதிர்த்து போராடி வரும் மக்களை சந்தித்தார். தற்போது தவெகவில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 5 கட்டங்களாக மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் வரும் மே மாதத்திற்குள் தனது கடைசி படத்தின் பணிகளை முடித்த பின், நடிகர் விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளார். அதேபோல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயனம் செய்து மக்களை சந்திக்க உள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து நடிகர் விஜய் செயல்பட்டு வருகிறார்.
கட்சி தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்திருக்கும் சூழலில், இதுவரை விஜய் ஒருமுறை கூட செய்தியாளர்களை சந்திக்கவில்லை. நடிகராக இருந்த போது ஏராளமான முறை செய்தியாளர்களை சந்தித்த விஜய், அரசியலில் களமிறங்கிய பின் பத்திரிகையாளர்களை சந்திக்காதது விவாதமாகி வருகிறது. பத்திரிகையாளர்களை சந்திக்காமல் சோசியல் மீடியாவில் அறிக்கை வெளியிட்டு அரசியல் செய்து வருகிறார்.
இதுகுறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்திடம் விஜய்-ன் அரசியல் நகர்வு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த பிரேமலதா விஜயகாந்த், ஒரு நடிகராக இருந்த போது செந்தூரப்பாண்டி படத்தின் மூலமாக பட்டி தொட்டியெங்கும் விஜயை கொண்டு சேர்த்தவர் விஜய்காந்த்.
சிறுவயதில் இருந்தே எங்கள் வீட்டின் அருகிலேயே இருந்தவர். எப்போதும் போல் எங்கள் வீட்டு பையன் தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் சினிமா வேறு, அரசியல் வேறு. இதனை விஜயிடம் நேரடியாகவும் கூறியிருக்கிறேன். ஆனாலும் அவ்வளவு பெரிய பிசினஸை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்துள்ளார். அதனை பாராட்ட வேண்டும்.
இளைஞராக இருக்கும் விஜய், என்ன சாதிக்கப் போகிறார் என்பதை பார்க்க நாங்களும் காத்திருக்கிறோம். முதலில் 4க்கு 4 அறையில் அமர்ந்து பேசுவதை விடுத்து பொது வெளிக்கு வர வேண்டும், மக்களை சந்திக்க வேண்டும். பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டும். மக்களின் பிரச்சனையை கையில் எடுக்க வேண்டும். அப்போதுதான் அரசியலில் நிலைத்து நிற்க முடியும். இதனை விஜயிடமும் சொல்லி இருக்கிறேன்.
இன்று அரசியலில் களமிறங்கிய உடனே முதலமைச்சராக வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் ஒரு மேடையில் பேசியிருந்தார். அப்போ உதயநிதி ஸ்டாலின் மட்டும் வந்தவுடன் துணை முதலமைச்சராகிவிடலாமா என்று மக்கள் சார்பாக நான் கேட்கிறேன். ஏனென்றால் அரசியலுக்கு வந்த பின் 3 முதல் 4 ஆண்டுகளில் உறுப்பினர், எம்எல்ஏ, அமைச்சர், துணை முதலமைச்சர் என்று முன்னேற்றம் கண்டுவிட்டார் என்று விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications