மதுரையில் 500 ஏக்கரில் நடக்கும் தவெக மாநாடு.. இடம் யாருடையது? அமைதி காக்கும் புஸ்ஸி ஆனந்த்!
மதுரை: மதுரையில் தவெகவின் 2வது மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடத்த ஆயத்தமாகி வரும் நிலையில், தவெக மேலிடம் ஒரு தகவலை மட்டும் வெளியிடாமல் மிகவும் அமைதி காத்து வருகிறது. அதாவது விக்கிரவாண்டி மாநாடு நடந்த இடத்தை விவசாயிகளிடம் இருந்து பெற்ற நிலையில், இந்த மாநாடு நடக்கும் இடத்தின் உரிமையாளர் யார் என்பதை வெளியிடாமல் சைலண்ட்டாக உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு பாரபத்தியில் 506 ஏக்கர் நிலத்தில் நடக்கவுள்ளது. இந்த மாநாட்டிற்கு வரும் வாகனங்களை பார்க்கிங் செய்வதற்காக மட்டும் 6 இடங்கள் தனித்தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மதுரையைப் பொறுத்தவரை அம்மா திடல், ஒத்தக்கடை திடல், விமான நிலையம் அருகே உள்ள இடம் ஆகியவற்றில் தான் இதுவரை அரசியல் கட்சிகளின் மாநாடு நடைபெற்று இருக்கிறது.

இந்த நிலையில் தவெக சார்பாக 2வது மாநில மாநாட்டிற்கான இடத் தேர்வு சில மாதங்களுக்கு முன்பே முடிவடைந்துவிட்டது என்று தெரிய வந்துள்ளது. ஏனென்றால் தவெக முதல் மாநாட்டைத் தமிழ்நாட்டின் மையப் பகுதியான திருச்சி அல்லது மதுரையில் நடத்தத் திட்டமிட்டிருந்தது. ஆனால் இடம் கிடைக்காதது, ஆளுங்கட்சியின் மிரட்டல் காரணமாக மாநாட்டிற்கான இடத்தை தேர்வு செய்ய முடியாமல் தவித்தது.
இறுதியாக வேறு வழியின்றி விக்கிரவாண்டியில் உள்ள வி சாலையில் விவசாயிகளிடம் இருந்த நிலத்தைச் சுத்தம் செய்து மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது. அந்த மாநாட்டிலும் கூட 75 ஆயிரம் இருக்கைகள் மட்டுமே போட முடிந்தது. தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 5 லட்சம் தொண்டர்கள் விக்கிரவாண்டி மாநாட்டில் பங்கேற்று இருந்தனர்.
இந்த நிலையில் 2வது மாநில மாநாடு நடத்த வேண்டும் என்ற முடிவை எடுத்தவுடன், மிகவும் சைலண்ட்டாக தவெக காய்களை நகர்த்தியது. ஏற்கனவே விக்கிரவாண்டி, சென்னை மற்றும் கோவைக்கு விஜய் பயணித்திருப்பதால், இம்முறை மதுரையில் மாநாட்டை நடத்த வேண்டும் என்பதில் விஜய் குறியாக இருந்துள்ளார். இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பே மாநாட்டிற்கான இடத்தை தவெக லாக் செய்திருக்கிறது.
கோவையில் பூத் கமிட்டி மாநாடு நடத்த இடம் கொடுத்த எஸ்.என்.எஸ் கல்லூரி நிர்வாகத்திற்குத் தெரிந்த நபர் மூலமாக, மதுரை பாரபத்தி இடத்தை தவெக அடையாளம் கண்டுள்ளது. மொத்தமாக 506 ஏக்கர் நிலம் என்று தெரிய வந்த பின், உடனடியாக புஸ்ஸி ஆனந்த் மதுரைக்கு அனுப்பப்பட்டு ஆய்வு செய்யப் பணிக்கப்பட்டுள்ளார். இந்த நிலம் சரியாக இருக்கும் என்று தெரிந்த பின், விஜய் குஷியாகிவிட்டாராம்.
ஆனாலும் தவெக மேலிடம் கடைசி வரை அமைதி காத்திருக்கிறது. மதுரை மாவட்டச் செயலாளர்களுக்கே முதல் நாள் இரவில் தான் மாநாட்டிற்கான பூமி பூஜை குறித்த தகவல் சொல்லப்பட்டது. விக்கிரவாண்டி மாநாட்டிற்கான பூமி பூஜையை பிரம்மாண்டமாக நடத்திய தவெக, இம்முறை ஆளும் தரப்பில் இருந்து எந்த சிக்கலும் வந்துவிடக் கூடாது என்பதற்காக அமைதியாக நடத்தி முடித்தது.
பூமி பூஜை போடப்பட்ட பின்னரே, மதுரை மாநாட்டிற்கு அனுமதி கோரி காவல்துறையை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சந்தித்தார். அந்த அளவிற்கு தவெக மிகவும் அமைதி காத்தது. ஆனாலும் காவல்துறை தரப்பில் விநாயகர் சதுர்த்தியை காரணமாகக் கூறி மாநாட்டின் தேதியை மாற்றினர். ஆனால் பெரிய வித்தியாசம் இல்லாததால், எதிர்பார்த்ததற்கு முன்பாகவே அத்தனை பணிகளை தவெக முடித்துள்ளது.
ஆனாலும் தவெக இதுவரை மாநாடு நடக்கும் இடம் யாருடையது என்பதை வெளியிடவில்லை. கிட்டத்தட்ட 500 ஏக்கர் நிலத்தில் தவெக மாநாடு நடப்பதால், வரும் காலங்களில் பல்வேறு கட்சிகளும் இதே இடத்தில் மாநாடு நடத்த வாய்ப்புள்ளதாகவும் பார்க்கப்படுகிறது. விமான நிலையத்தில் இருந்து சில நிமிடங்களில் செல்ல முடியும் என்பதால், இந்த இடத்தில் இனி அரசியல் மாநாடுகள் அதிகம் நடக்க வாய்ப்புகள் உள்ளது.












Click it and Unblock the Notifications