பொங்கி வரும் வைகை! இரு கரைகளும் அணைத்து ஆர்ப்பரிக்கும் வெள்ளம்! மதுரை மக்களே அலர்ட்டா இருக்கனும்!
மதுரை: கனமழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்ததை தொடர்ந்து, அணையில் இருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கன அடிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆற்றங்கரையோர மக்களுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் வைகை அணை 70 அடியாக உயர்ந்தது. இதன் காரணமாக கடந்த 2 வாரங்களுக்கு மேலாக வைகை அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு வந்தது.
வைகை அணையில் தேக்கப்படும் நீரானது, தேனி திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு முக்கிய ஆதாரமாக உள்ளது.
சரியா போச்சு.. பெங்களூரில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
இந்நிலையில், தொடர் மழையால் வராகநதியில் இருந்தும், சோத்துப்பாறை, மஞ்சளாறு அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் மற்றும் வைகை அணையில் இருந்து உபரி நீர் திறப்பு உள்ளிட்ட காரணங்களால் வைகை ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு காரணமாக, இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனையடுத்து, ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளன.
15 ஆயிரம் கன அடி நீர்
கனமழை காரணமாக வைகை அணைக்கு வரும் நீரை அப்படியே வெளியேற்றி வந்த நிலையில், வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து, தற்போது வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வைகை ஆற்றில் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி அளவு தண்ணீர் வர உள்ளது. வைகை கரையோரம் உள்ள பொதுமக்கள் கூடுதல் கவனத்துடனும், பாதுகாப்பாகவும் இருந்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் வைகை ஆற்றில் இறங்குவதை முற்றிலும் தவிர்த்திடவும், ஆடு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் வைகை ஆற்றில் இறங்காமல் பாதுகாத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.