மதுரை - பெங்களூர் வந்தே பாரத் ரயில்.. குட் நியூஸ் எப்போது வெளியாகும்.. எதிர்பார்க்கும் பயணிகள்
மதுரை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆட்சி நடைபெறும் மதுரையில் இருந்து கர்நாடகா தலைநகர் பெங்களூருவிற்கு வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது. மதுரையில் இருந்து பெங்களூருவுக்கு வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்படுவது குறித்து வருகிற 29ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேக் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட செமி ஹைஸ்பீடு வந்தே பாரத் ரயில்கள் நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. விரைவில் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்களும் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

நாடு முழுவதும் தற்போது வரை 41 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் பல வந்தே பாரத் ரயில்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், மதுரையில் இருந்து பெங்களூருவுக்கு வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூர் வழியாக மைசூருக்கும், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஈரோடு திருப்பூர் வழியாக கோவைக்கும், சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி மதுரை வழியாக திருநெல்வேலிக்கும் தெற்கு ரயில்வே சார்பில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
தெற்கு மத்திய ரயில்வே சார்பில் விஜயவாடாவில் இருந்து சென்னைக்கு திருப்பதி வழியாக ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இதனிடையே, தெற்கு ரயில்வேக்கு கூடுதலாக ஒரு வந்தே பாரத் ரயிலை ஒதுக்க மத்திய ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளதாகவும், அப்படி ஒதுக்கப்படும் பட்சத்தில் மதுரை - பெங்களூர் மார்க்கமாக இயக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியானது.
இதனிடையே, மதுரை-பெங்களூர் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும் என தெற்கு ரயில்வேக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில், மதுரை - பெங்களூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கும் முடிவு இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, மதுரை-பெங்களூரூ வழிதடத்தில் உள்ள தண்டவாளங்கள் மற்றும் பிற வசதிகளை வந்தே பாரத் ரயில் பயணிப்பதற்கு தகுந்த முறையில் மாற்றி அமைப்பதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருவதாக தெரிகிறது. இதுகுறித்து வருகிற 29ஆம் தேதி தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்களை மதுரையில் சந்திக்க திட்டமிட்டுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது தூத்துக்குடி, நாகர்கோவிலில் இருந்து மைசூர், பெங்களூர் நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மதுரையில் இருந்து பெங்களூர் நகரத்திற்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் பட்சத்தில் ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் மதுரை மண்ணின் மைந்தர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மதுரைவாசிகளின் மனம் குளிரும் வகையில் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications