சர்கார் விவகாரம்.. அஜித் ரசிகர்களை மேற்கோள் காட்டிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!
Recommended Video

மதுரை: விஜய் ரசிகர் மன்றத்தினர் வீடுகளில் கூட ஜெயலலிதா அரசு கொடுத்த விலையில்லா பொருட்கள் இருக்கும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
மதுரையில் இன்று நிருபர்களை சந்தித்த அவர் மேலும் கூறியதாவது: சர்கார் திரைப்படத்தில் வைத்த காட்சிகளை போல இனி எல்லா படங்களிலும் காட்சிகளை வைக்க துவங்குவார்கள் என்பதால்தான் எதிர்க்கிறோம்.
இனியாவது திரைத்துறையினர் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
['சர்கார்' சட்டம் 49 பிக்கும், தேர்தல் விதி 49 பிக்கும் என்ன வித்தியாசம்! ]

விஜய் ரசிகர் மன்றத்தினர்
ஜெயலலிதா அரசின் இலவச திட்டங்களால் பலன் பெற்றோர் பல கோடி பேர். விஜய் ரசிகர் மன்றத்தினர் வீடுகளில் கூட ஜெயலலிதா அரசு திட்டங்களால் பலன் பெற்றவர்கள் உள்ளனர். மாணவிகளுக்கான இலவச சைக்கிள், மடிக்கணினி உட்பட பல்வேறு திட்டங்களை சொல்ல முடியும்.

அஜித் ரசிகர்கள் வீடுகள்
கமல்ஹாசன், ரஜினிகாந்த், அஜித் என அனைத்து ரசிகர்கள் வீடுகளிலும் ஜெயலலிதா திட்டத்தால் பலன் அடைந்தோர் இருப்பார்கள். ஜாதி, மத பாகுபாடின்றி ஜெயலலிதா எல்லோருக்குமான திட்டங்களை செயல்படுத்தியவர். அவரை கொச்சைப்படுத்துவதை ஏற்க முடியாது.

உடனே நீக்க வேண்டும்
திரையரங்கு உரிமையாளர்கள் அனைவருமே ஜெயலலிதா புகழுக்கு களங்கம் விளைவிக்கும் படத்தை ஏற்க முடியாது என ஒரே குரலில் கூறினர். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். படத்தில் இடம் பெற்ற சர்ச்சை காட்சிகளை நீக்குவதாக கூறியுள்ளனர். அதை உடனடியாக செய்ய வேண்டும். நீக்க சம்மதித்த படக்குழுவிற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

எதிர்காலத்தில் நடக்க கூடாது
மறைந்த தலைவரை வம்புக்கு இழுத்து பேசக்கூடாது. அவர் தெய்வமாகிவிட்டார். அவரது திட்டங்களால் பலன் அடைந்துவிட்டு இப்போது இப்படி பேசுவது சரியான நடைமுறை கிடையாது. சர்கார் போன்ற நிகழ்வுகள் இனி எதிர்காலத்தில் நடக்க கூடாது. இது அன்பான எச்சரிக்கை. இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். ரஜினி, கமல் ஆகிய நடிகர்கள் சர்கார் விவகாரத்தில் அரசுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில், அஜித் எதுவுமே கூறவில்லை. இருப்பினும் அவரையும் மேற்கோள் காட்டி பேட்டியளித்துள்ளார் அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications